பாடல் #1060

பாடல் #1060: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து அனைத்து உயிர்களுக்கும் அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்த சக்தியானவள் என்றும் மாறாதவளாக அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான ஞானத்தை அருளி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்துக்குள்ளே வைத்து நிலை நிறுத்தியதால் அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.

கருத்து: அனைத்து செயல்களையும் செய்யும் ஞானத்தை வழங்குகின்ற திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா தேவி எனும் பெயருடன் உயிர்களுக்குள்ளே என்றும் மாறாமல் நிலைபெற்று நின்று அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற அறிவைக் கொடுப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.