பாடல் #140

பாடல் #140: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தானே புலனைந்தும் தன்வச மாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

விளக்கம்:

குருவின் அருளால் இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெறுபவர்களுக்குத் தானாகவே இதுவரை அவர்களை ஆட்டி வைத்திருந்த ஐந்து புலன்களும் அவர்களின் வசமாகும். அவ்வாறு அவர்களின் வசமான ஐந்து புலன்களும் அவைகளின் தனிப்பட்ட தன்மைகளை இழந்துவிடும். அவ்வாறு தனிப்பட்ட தன்மைகளை இழந்த ஐந்து புலன்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் விருப்பம் போல செயல்படுபவையாக மாறிவிடும். அவ்வாறு விருப்பம் போல செயல்படும் ஐம்புலன்களும் அவை மூலம் வந்த மலங்கள் முழுவதும் குருவின் திருவருளால் தாமாகவே அவர்களை விட்டு நீங்கி அவர்களின் ஆன்மா மட்டுமே இறைவனைச் சென்று சந்திக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.