பாடல் #1600

பாடல் #1600: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

கழலார் கமலத் திருவடி யென்னு
நிழல்சேரப் பெற்றே னெடுமா லறியா
வழல்சேரு மங்கியு ளாதிப் பிரானுங்
குழல்சேரு மென்னுயிர் கூடுங் குலைத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கழலார கமலத திருவடி யெனனு
நிழலசெரப பெறறெ னெடுமா லறியா
வழலசெரு மஙகியு ளாதிப பிரானுங
குழலசெரு மெனனுயிர கூடுங குலைததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கழல் ஆர் கமல திருவடி என்னும்
நிழல் சேர பெற்றேன் நெடு மால் அறியா
அழல் சேரும் அங்கி உள் ஆதி பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே.

பதப்பொருள்:

கழல் (சிலம்புகளை) ஆர் (அணிந்து கொண்டு இருக்கும்) கமல (தாமரை மலர் போன்ற) திருவடி (திருவடிகள்) என்னும் (என்று உணரப் படுகின்ற)
நிழல் (நிழலோடு) சேர (யானும் சேர்ந்து இருக்கும் படி) பெற்றேன் (இறைவனது திருவருளால் பெற்றேன்) நெடு (நீண்ட நெடும் அண்ணாமலையாக) மால் (திருமாலாலும்) அறியா (அறிய முடியாத)
அழல் (மிகப்பெரும் ஜோதியோடு) சேரும் (சேருகின்ற) அங்கி (எமக்குள் இருக்கின்ற ஜோதியின்) உள் (உள்ளே இருக்கின்ற) ஆதி (ஆதி) பிரானும் (தலைவனாகிய இறைவனோடு)
குழல் (எமது உடலோடு தலை முடியும்) சேரும் (சேர்ந்து) என் (அதனுடன் எமது) உயிர் (உயிரும்) கூடும் (சேர்ந்து அவனோடு கூடி) குலைத்தே (ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்).

விளக்கம்:

சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கும் தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று உணரப் படுகின்ற நிழலோடு யானும் சேர்ந்து இருக்கும் படி இறைவனது திருவருளால் பெற்றேன். நீண்ட நெடும் அண்ணாமலையாக திருமாலாலும் அறிய முடியாத மிகப்பெரும் ஜோதியோடு சேருகின்ற எமக்குள் இருக்கின்ற ஜோதியின் உள்ளே இருக்கின்ற ஆதி தலைவனாகிய இறைவனோடு எமது உடலோடு சேர்ந்த தலை முடியுடன் எமது உயிரும் சேர்ந்து அவனோடு கூடி ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்றோம்.

பாடல் #1601

பாடல் #1601: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வ
ரடிமன்ன ரின்பத் தளவில்லைக் கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்க ளீசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முடிமனன ராயமூ வுலகம தாளவ
ரடிமனன ரினபத தளவிலலைக கெடகின
முடிமனன ராயநினற தெவரக ளீசன
குடிமனன ராயககுறற மறறுநின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முடி மன்னர் ஆய் மூ உலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னர் ஆய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னர் ஆய் குற்றம் அற்று நின்றாரே.

பதப்பொருள்:

முடி (கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக இருப்பவர்கள்) மூ (தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று) உலகம் (உலகங்களிலும்) அது (இருக்கின்ற பல நாடுகளை) ஆள்வர் (ஆட்சி செய்வார்கள்)
அடி (ஆனால், இறைவனது திருவடிகளை) மன்னர் (தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள்) இன்பத்து (அடைகின்ற பேரின்பத்திற்கு) அளவு (அளவு என்பதே) இல்லை (இல்லை) கேட்கின் (கேட்டுக் கொள்ளுங்கள்)
முடி (ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) தேவர்கள் (தேவர்கள் கூட) ஈசன் (இறைவனின்)
குடி (திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த) மன்னர் (மன்னர்கள்) ஆய் (ஆக இருந்தால்) குற்றம் (எந்த விதமான மலங்களும்) அற்று (இல்லாமல்) நின்றாரே (நிற்பார்கள்).

விளக்கம்:

கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக இருப்பவர்கள் தேவ லோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் இருக்கின்ற பல நாடுகளை ஆட்சி செய்வார்கள். ஆனால், இறைவனது திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று வைத்து இருக்கின்றவர்கள் அடைகின்ற பேரின்பத்திற்கு அளவு என்பதே இல்லை கேட்டுக் கொள்ளுங்கள். ஆகவே மலங்கள் இருப்பதாலேயே கிரீடத்தை சூடிக்கொண்டு இருக்கின்ற மன்னர்களாக நிற்கின்ற தேவர்கள் கூட இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் குடி வைத்த மன்னர்களாக இருந்தால் எந்த விதமான மலங்களும் இல்லாமல் நிற்பார்கள்.

கருத்து:

தேவர்கள் கன்மம் மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் அவர்களுக்கு ஆணவமலம் இருக்கின்றது. அவர்கள் இறைவனின் திருவடிகளை தமது நெஞ்சத்திற்குள் நிலைபெற்று இருக்கும் படி செய்து விட்டால் அந்த மலமும் நீங்கி எந்தவிதமான மலங்களும் இல்லாமல் இருப்பார்கள்.

பாடல் #1602

பாடல் #1602: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைததெ னடிகண மனததினுள ளெநான
பொயததெ யெரியும புலனவழி பொகாம
லெயததெ னுழலு மிருவினை மாறறிடு
மெயததெ னறிநதெ னவவெதததி னநதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்தேன் அடி கண் மனத்தின் உள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இரு வினை மாற்றிடும்
மெய் தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.

பதப்பொருள்:

வைத்தேன் (வைத்தேன்) அடி (இறைவனை திருவடிகளை) கண் (எனது கண்களிலும்) மனத்தின் (மனதிற்கும்) உள்ளே (உள்ளே) நான் (யான்)
பொய்த்தே (உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே) எரியும் (அதிகமாக்குகின்ற) புலன் (ஐந்து புலன்களின்) வழி (வழியே) போகாமல் (மனம் போய் விடாமல்)
எய்த்தேன் (ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து சென்று) உழலும் (பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) மாற்றிடும் (மாற்றிடும்)
மெய் (உண்மையான) தேன் (பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக) அறிந்தேன் (அறிந்து கொண்டேன்) அவ் (அந்த) வேதத்தின் (வேதங்களின்) அந்தமே (எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை).

விளக்கம்:

இறைவனை திருவடிகளை எனது கண்களிலும் மனதிற்கு உள்ளேயும் யான் வைத்துக் கொண்டேன். அதனால் உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய் விடாமல் ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து செல்லும். அதனால் பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் மாற்றிடும் உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை யான் அறிந்து கொண்டேன்.

பாடல் #1603

பாடல் #1603: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

அடிசார லாமண்ணல் பாத மிரண்டு
முடிசார வைத்தனர் முன்னே முனிவர்
படிசார்ந்த வின்பப் பழவடி வெள்ளங்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடிசார லாமணணல பாத மிரணடு
முடிசார வைததனர முனனெ முனிவர
படிசாரநத வினபப பழவடி வெளளங
குடிசார நெறிகூடி நிறபவர கொளகையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடி சாரல் ஆம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னே முனிவர்
படி சார்ந்த இன்ப பழ அடி வெள்ளம்
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.

பதப்பொருள்:

அடி (இறைவனின் திருவடிகளையே) சாரல் (சார்ந்து) ஆம் (இருக்கின்றவர்கள்) அண்ணல் (இறைவனின்) பாதம் (பாதங்கள்) இரண்டும் (இரண்டையும்)
முடி (தமது தலையின் மேல்) சார (சேர்ந்து இருக்கும்படி) வைத்தனர் (வைத்து இருக்கின்றார்கள்) முன்னே (ஆதிகாலத்தில்) முனிவர் (முற்றும் துறந்த முனிவர்கள்)
படி (அந்த திருவடிகளால் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக) சார்ந்த (சேர்ந்து இருக்கும் படி கொடுக்கின்றார்கள்) இன்ப (பேரின்பத்தை அருளும்) பழ (பழம் பெரும் இறைவனின்) அடி (திருவடிகளில் இருந்து) வெள்ளம் (வெள்ளம் போல் பெற்ற அருளை)
குடி (இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து) சார் (அதையே சார்ந்து இருக்கின்ற) நெறி (வழிமுறையில்) கூடி (ஒன்றாக கூடி) நிற்பவர் (நிற்கின்ற அனைத்து முனிவர்களின்) கொள்கையே (கொள்கையும் இதுவே ஆகும்).

விளக்கம்:

இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.

கருத்து:

வெள்ளம் போன்ற இறைவனின் அருளை அப்படியே வழங்கினால் தாங்கிக் கொள்ள முடியாத உயிர்களுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளுக்கு ஏற்றபடி படிப்படியாக அனுபவிக்கும் படி மாற்றிக் கொடுத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் முற்றும் துறந்த முனிவர்கள். திருவடி பேற்றை அடைந்த இவர்களின் தன்மையை இந்தப் பாடலில் திருமூலர் அருளுகின்றார்.

பாடல் #1604

பாடல் #1604: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

மந்திர மாவது மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவது
மெந்தை பிரான்ற னிணையடி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மநதிர மாவது மாமருந தாவதுந
தநதிர மாவதுந தானஙக ளாவதுஞ
சுநதர மாவதுந தூயநெறி யாவது
மெநதை பிரானற னிணையடி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணை அடி தானே.

பதப்பொருள்:

மந்திரம் (அனைத்து விதமான மந்திரங்கள் / மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோல்) ஆவதும் (ஆக இருப்பதும்) மா (அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற / பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும்) மருந்து (மருந்து) ஆவதும் (ஆக இருப்பதும்)
தந்திரம் (தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகள் / இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தானங்கள் (அடியவர்கள் செய்கின்ற / அனைத்து விதமான தான தர்மங்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
சுந்தரம் (அழுக்கை நீக்கிய பேரழகு / பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்கள்) ஆவதும் (ஆக இருப்பதும்) தூய் (இறைவனை அடைவதற்கு / மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான) நெறி (வழி முறைகள்) ஆவதும் (ஆக இருப்பதும்)
எந்தை (எமது தந்தையும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும்) தன் (ஆகிய இறைவனின்) இணை (ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற) அடி (திருவடிகளே) தானே (ஆகும்).

விளக்கம்:

அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகளாக இருப்பதும் உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும் இறைவனை அடைவதற்கு தூய்மையான வழி முறைகளாக இருப்பதும் எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.

உள் விளக்கம்:

மாயையால் மூடியிருக்கின்ற மனதை திறக்கின்ற திறவு கோலாக இருப்பதும் பிறவி பிணி எனும் நோயை தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் இறைவனை விரைவில் அடைவதற்கான வழிகளாக இருப்பதும் அடியவர்கள் செய்கின்ற அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் பிறவி எனும் அழுக்கை நீக்கிய சுந்தரமான அமரர்களாக இருப்பதும் மும் மலங்களை நீக்கி தூய்மை அடைவதற்கான வழி முறையாக இருப்பதும் இறைவனின் திருவடிகளே ஆகும்.