பாடல் #1598

பாடல் #1598: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல நீக்குந்
திருவடி ஞானந் திண்சித்தி முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவடி ஞானஞ சிவமாககு விககுந
திருவடி ஞானஞ சிவலொகஞ செரககுந
திருவடி ஞானஞ சிறைமல நீககுந
திருவடி ஞானந திணசிததி முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு அடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திரு அடி ஞானம் சிவ லோகம் சேர்க்கும்
திரு அடி ஞானம் சிறை மலம் நீக்கும்
திரு அடி ஞானம் திண் சித்தி முத்தியே.

பதப்பொருள்:

திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிவம் (சிவமாகவே) ஆக்குவிக்கும் (ஆக்கி விடும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிவ (இறைவன்) லோகம் (இருக்கின்ற இடத்திற்கு) சேர்க்கும் (எம்மை கொண்டு சேர்க்கும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானமே) சிறை (எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய) மலம் (மலங்களை) நீக்கும் (நீக்கி விடும்)
திரு (போற்றத்தக்க) அடி (இறைவனின் திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால்) ஞானம் (யாம் உணர்ந்த ஞானத்தால்) திண் (உறுதியாக) சித்தி (கிடைத்து விடும்) முத்தியே (முக்தியே).

விளக்கம்:

இறைவனின் போற்றத்தக்க திருவடிகளை எம் மேல் வைத்து அருளியதால் யாம் உணர்ந்த ஞானமே சிவமாகவே ஆக்கி விடும். அதுவே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு எம்மை கொண்டு சேர்க்கும். அதுவே எம்மை இந்த உலகச் சிறையில் வைத்திருக்க காரணமாகிய மலங்களை நீக்கி விடும். அந்த ஞானத்தால் முக்தியும் எமக்கு உறுதியாக கிடைத்து விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.