பாடல் #1595

பாடல் #1595: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

பேச்சற்ற வின்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற யென்னைச் சிவமாக்கு மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்சப் புகழ்மாளத் தாடந்து மன்னுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெசசறற வினபததுப பெரானந தததிலெ
மாசசறறு யெனனைச சிவமாககு மாளவிததுக
காசசறற சொதி கடனமூனறுங கைககொணடு
வாசசப புகழமாளத தாடநது மனனுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கும் ஆள்வித்து
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கை கொண்டு
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே.

பதப்பொருள்:

பேச்சு (குருநாதராக வந்த இறைவன் பேச்சே) அற்ற (இல்லாத) இன்பத்து (இன்பத்தில்) பேரானந்தத்திலே (பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து)
மாச்சு (மாசு மலங்கள்) அற்ற (எதுவும் இல்லாத) என்னை (என்னை) சிவம் (சிவமாகவே) ஆக்கும் (ஆகும் படி செய்து) ஆள்வித்து (என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி)
காச்சு (வெப்பம்) அற்ற (இல்லாத) சோதி (தூய ஜோதி உருவத்தில்) கடன் (எம்மிடம் இருந்த மாயை, அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய) மூன்றும் (மூன்றையும்) கை (தம் வசமாகக் கை) கொண்டு (கொண்டு)
வாச்ச (இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற) புகழ் (புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல்) மாள (அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி) தாள் (தனது திருவடிகளை) தந்து (தந்து அருளி) மன்னுமே (என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்).

விளக்கம்:

குருநாதராக வந்த இறைவன் பேச்சே இல்லாத இன்பத்தில் பேரானந்த நிலையில் என்னை மூழ்க வைத்து மாசு மலங்கள் எதுவும் இல்லாத என்னை சிவமாகவே ஆகும் படி செய்து என்னை முழுவதுமாக ஆட்கொண்டு அருளி வெப்பம் இல்லாத தூய ஜோதி உருவத்தில் எம்மிடம் இருந்த மாயை அசுத்த மாயை சுத்த மாயை ஆகிய மூன்றையும் தம் வசமாகக் கை கொண்டு இந்த நிலை பெற்ற எனக்கு இந்த உலகத்தில் கிடைக்கின்ற புகழ்ச்சிகளில் நான் மயங்கி விடாமல் அந்த புகழ்ச்சிகள் அழிந்து போகும் படி தனது திருவடிகளை தந்து அருளி என்னை எப்போதும் நிலைபெற்று வாழும் படி செய்து விட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.