பாடல் #1590

பாடல் #1590: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்
பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
வுவந்த குருபத முள்ளத்து வந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இசைந தெழுமனபி லெழுநத படியில
பசைந திடுமீசனார பாசதது ளெகச
சிவநத குருவநது செனனிகை வைகக
வுவநத குருபத முளளதது வநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியில்
பசைந்து இடும் ஈசனார் பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்தே.

பதப்பொருள்:

இசைந்து (இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில்) எழும் (எழுகின்ற) அன்பில் (உண்மையான அன்பில்) எழுந்த (இறைவன் எழுந்து) படியில் (அருளியதால்)
பசைந்து (அடியவரோடு ஒன்றாக சேர்ந்து) இடும் (இருக்கின்ற) ஈசனார் (இறைவனார்) பாசத்து (அடியவரின் பாசத் தளைகளை) உள் (அவருக்குள்ளிருந்து) ஏக (விலகும் போகும் படி செய்து)
சிவந்த (அருள் வடிவமான பரம்பொருளே) குரு (குருவாக) வந்து (வந்து) சென்னி (அடியவரின் தலையின் மேல்) கை (தமது திருக்கைகளை) வைக்க (வைத்து அருளும் போது)
உவந்த (அந்த அருளால் மகிழ்ந்து) குரு (குருவாக வந்திருக்கும்) பதம் (இறைவனின் திருவடிகளானது) உள்ளத்து (அடியவரின் உள்ளத்திற்குள்) வந்தே (வந்து வீற்றிருக்கும்).

விளக்கம்:

இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற இறைவனார் அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகும் போகும் படி செய்து, அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது அந்த அருளால் மகிழ்ந்து இருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள் குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகளானது வந்து வீற்றிருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.