பாடல் #1594

பாடல் #1594: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
வுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரவனு யிரமுச சொரூபமுங கைககொண
டரிய பொருளமுத திரையாகக கொணடு
பெரிய பிரானடி நநதி பெசசறறு
வுருகிட வெனனையங குயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரவன் உயிர் முச் சொரூபமும் கை கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

குரவன் (இறைவனே குருவாக வந்து) உயிர் (எனது உயிரின்) முச் (மூன்று விதமான) சொரூபமும் (சொரூபங்களாகிய உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்றையும்) கை (தம் வசமாக கை) கொண்டு (கொண்டு)
அரிய (அரியதான) பொருள் (பொருளாகிய எனது ஆன்மாவையே) முத்திரை (தமது முத்திரை) ஆக (ஆக எடுத்துக்) கொண்டு (கொண்டு)
பெரிய (அனைத்திலும் பெரியவனும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை எனக்குள் வைத்து) நந்தி (குருநாதராகிய இறைவன் தனது அருளால்) பேச்சு (எனது பேச்சு முழுவதம்) அற்று (இல்லாமல் போகும் படி செய்து)
உருகிட (அவரின் அன்பில் உருகி விடும் படி) என்னை (என்னை செய்து) அங்கு (தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான) உய்ய (பக்குவத்தை அடையும் படி) கொண்டானே (ஆட் கொண்டு அருளினார்).

விளக்கம்:

இறைவனே குருவாக வந்து எனது உயிரின் மூன்று விதமான சொரூபங்களாகிய உருவம் அருவுருவம் அருவம் ஆகிய மூன்றையும் தம் வசமாக கை கொண்டு அரியதான பொருளாகிய எனது ஆன்மாவையே தமது முத்திரையாக எடுத்துக் கொண்டு அனைத்திலும் பெரியவனும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை எனக்குள் வைத்து குருநாதராகிய இறைவன் தனது அருளால் எனது பேச்சு முழுவதம் இல்லாமல் போகும் படி செய்து அவரின் அன்பில் உருகி விடும் படி செய்து தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான பக்குவத்தை அடையும் படி என்னை ஆட் கொண்டு அருளினான்.

குறிப்பு:

உருவம் என்பது முழுவதுமாக கண்களால் காணும் படி உள்ள உடலாகும். அருவுருவம் என்பது ஒளியால் ஆன உடலாகும். அருவம் என்பது சூட்சுமத்தால் ஆன உடலாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.