பாடல் #1594

பாடல் #1594: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

குரவனு யிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
வுருகிட வென்னையங் குய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரவனு யிரமுச சொரூபமுங கைககொண
டரிய பொருளமுத திரையாகக கொணடு
பெரிய பிரானடி நநதி பெசசறறு
வுருகிட வெனனையங குயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரவன் உயிர் முச் சொரூபமும் கை கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

குரவன் (இறைவனே குருவாக வந்து) உயிர் (எனது உயிரின்) முச் (மூன்று விதமான) சொரூபமும் (சொரூபங்களாகிய உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்றையும்) கை (தம் வசமாக கை) கொண்டு (கொண்டு)
அரிய (அரியதான) பொருள் (பொருளாகிய எனது ஆன்மாவையே) முத்திரை (தமது முத்திரை) ஆக (ஆக எடுத்துக்) கொண்டு (கொண்டு)
பெரிய (அனைத்திலும் பெரியவனும்) பிரான் (அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை எனக்குள் வைத்து) நந்தி (குருநாதராகிய இறைவன் தனது அருளால்) பேச்சு (எனது பேச்சு முழுவதம்) அற்று (இல்லாமல் போகும் படி செய்து)
உருகிட (அவரின் அன்பில் உருகி விடும் படி) என்னை (என்னை செய்து) அங்கு (தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான) உய்ய (பக்குவத்தை அடையும் படி) கொண்டானே (ஆட் கொண்டு அருளினார்).

விளக்கம்:

இறைவனே குருவாக வந்து எனது உயிரின் மூன்று விதமான சொரூபங்களாகிய உருவம் அருவுருவம் அருவம் ஆகிய மூன்றையும் தம் வசமாக கை கொண்டு அரியதான பொருளாகிய எனது ஆன்மாவையே தமது முத்திரையாக எடுத்துக் கொண்டு அனைத்திலும் பெரியவனும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை எனக்குள் வைத்து குருநாதராகிய இறைவன் தனது அருளால் எனது பேச்சு முழுவதம் இல்லாமல் போகும் படி செய்து அவரின் அன்பில் உருகி விடும் படி செய்து தாம் இருக்கும் இடத்திற்கு செல்லுவதற்கான பக்குவத்தை அடையும் படி என்னை ஆட் கொண்டு அருளினான்.

குறிப்பு:

உருவம் என்பது முழுவதுமாக கண்களால் காணும் படி உள்ள உடலாகும். அருவுருவம் என்பது ஒளியால் ஆன உடலாகும். அருவம் என்பது சூட்சுமத்தால் ஆன உடலாகும்.

பாடல் #1593

பாடல் #1593: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போற் சிவமாதல் தீர்வு
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்திநற் சொல்லிறந் தோமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உரையற றுணரவற றுயிரபர மறறுத
திரையறற நீரபொற சிவமாதல தீரவு
கரையறற சததாதி நானகுங கடநத
சொரூபத திருததிநற சொலலிறந தொமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்வு
கரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தி நல் சொல் இறந்தோமே.

பதப்பொருள்:

உரை (பேச்சும்) அற்று (இல்லாமல்) உணர்வு (உணர்வும்) அற்று (இல்லாமல்) உயிர் (உயிரும்) பரம் (பரம்பொருளும் வேறு வேறு எனும் நிலையும்) அற்று (இல்லாமல்)
திரை (நுரையம் அலையும்) அற்ற (இல்லாத) நீர் (தெளிவான நீரை) போல் (போல) சிவம் (எனது மனமானது தெளிவு பெற்று சிவமாகவே) ஆதல் (ஆகி விடுவதை) தீர்வு (உறுதியாகப் பெற்று)
கரை (வரம்புகள்) அற்ற (இல்லாத) சத்து (உலக இயக்கத்திற்கு காரணமாகிய சக்திகளாக) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற பஞ்ச பூதங்களில்) நான்கும் (நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கையும்) கடந்த (கடந்து)
சொரூபத்து (ஆகாயத்தில் இருக்கின்ற இறை சொரூபத்தை) இருத்தி (எனக்குள் இருத்தி) நல் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) சொல் (சொற்களுமே) இறந்தோமே (இறந்து போய்விட அசைவற்ற சமாதி நிலையில் இருந்தேன் யான்).

விளக்கம்:

பாடல் #1590 இல் உள்ளபடி இறைவனே குருவாக வந்து தமது திருவடியை எனது உள்ளத்திற்குள் வைத்த பிறகு பேச்சும் இல்லாமல், உணர்வும் இல்லாமல், உயிரும் பரம்பொருளும் வேறு வேறு எனும் நிலையும் இல்லாமல், நுரையம் அலையும் இல்லாத தெளிவான நீரை போல எனது மனமானது தெளிவு பெற்று சிவமாகவே உறுதியாக ஆகி, வரம்புகள் இல்லாத உலக இயக்கத்திற்கு காரணமாகிய சக்திகளாக ஆதியிலிருந்தே இருக்கின்ற பஞ்ச பூதங்களில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகிய நான்கையும் கடந்து ஆகாயத்தில் இருக்கின்ற இறை சொரூபத்தை எனக்குள் இருத்தி, நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான சொற்களுமே இறந்து போய்விட அசைவற்ற சமாதி நிலையில் இருந்தேன் யான்.

கருத்து:

பஞ்ச பூதங்களில் நிலம் நீர் காற்று நெருப்பு ஆகிய நான்கிற்கும் உலக அளவில் வரையறுக்கப் பட்ட எல்லைகள் உண்டு. ஆனால் ஆகாயத்திற்கு எல்லையே இல்லை. அப்படி எல்லையே இல்லாத ஆகாயத்தில் பரந்து விரந்து இருக்கின்ற இறைவனது சொரூபத்தை எனது உள்ளத்திற்குள் இருத்தி எந்த விதமான எண்ணங்களும் அசைவுகளும் இல்லாத சமாதி நிலையில் இருந்தேன் என்று அருளுகின்றார்.

பாடல் #1592

பாடல் #1592: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

தானவ னாதிச் சொரூபத் துள்வந்திட்டு
வானச் சொரூபங் கணான்கு மகன்றற
வேனைய முத்திரை யீறாண்ட னனந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானவ னாதிச சொரூபத துளவநதிடடு
வானச சொரூபங கணானகு மகனறற
வெனைய முததிரை யீறாணட னனநதி
தானடி முறசூடடித தாபிதத துணமையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அவன் ஆதி சொரூபத்து உள் வந்து இட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகன்று அற
ஏனைய முத்திரை ஈறு ஆண்டனன் நந்தி
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே.

பதப்பொருள்:

தான் (அடியவருக்கு) அவன் (இறைவன்) ஆதி (தமது ஆதியில் இருக்கின்ற) சொரூபத்து (சுய ரூபமாகிய ஜோதியை) உள் (அவரின் உள்ளத்திற்குள்) வந்து (வந்து) இட்டு (வைத்து அருளுகின்றார்)
ஆன (இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின்) சொரூபங்கள் (பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில்) நான்கும் (அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம் ஆகிய நான்கும்) அகன்று (விலகிச் சென்று) அற (நீங்கி விட)
ஏனைய (மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே) முத்திரை (முத்திரையாக / ரூபமாக வைத்து) ஈறு (அதையே தமக்கு எல்லையாக கொண்டு) ஆண்டனன் (ஆண்டு அருளுகின்றான்) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவன்)
தான் (அந்த குருநாதனாகிய இறைவன்) அடி (தமது திருவடியை) முன் (அடியவரின் தலை மேல் முன்னரே) சூட்டி (கிரீடமாக சூட்டி) தாபித்தது (அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது) உண்மையே (பேருண்மையே ஆகும்).

விளக்கம்:

அடியவருக்கு இறைவன் தமது ஆதியில் இருக்கின்ற சுய ரூபமாகிய ஜோதியை அவரின் உள்ளத்திற்குள் வந்து வைத்து அருளுகின்றார். அப்போது இறைவனாகவே ஆகிவிட்ட அடியவரின் பஞ்ச கோசங்களாகிய சுய ரூபங்களில் அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் ஆகிய நான்கும் விலகிச் சென்று நீங்கி விட மீதி இருக்கின்ற ஆனந்த மய கோசத்தையே முத்திரையாக (ரூபம்) வைத்து அதையே தமக்கு எல்லையாக கொண்டு ஆண்டு அருளுகின்றான் குருவாக இருக்கின்ற இறைவன். அந்த குருநாதனாகிய இறைவன் தமது திருவடியை அடியவரின் தலை மேல் பாடல் #1590 இல் உள்ளபடி முன்னரே கிரீடமாக சூட்டி அடியவருக்குள் உறுதியாக ஸ்தாபித்தது பேருண்மையே ஆகும்.

பஞ்ச கோசங்கள்:

  1. அன்னமய கோசம் = உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிற உடல்.
  2. பிராணமய கோசம் = மூச்சாக உள் வந்து உடலின் அனைத்து இயக்கங்களையும் செயல் படுத்துகின்ற காற்று.
  3. மனோமய கோசம் = எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஆதாரமாக இருக்கின்ற மனம்.
  4. விஞ்ஞானமய கோசம் = பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் கொண்டு இருக்கின்ற அறிவு.
  5. ஆனந்தமய கோசம் = புலன்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற பேரின்பம்.

பாடல் #1591

பாடல் #1591: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறை
வாடந்து ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்
பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாடநத பொதெ தனைததநத தெமமிறை
வாடநது ஞான வலியையுந தநதிடடு
வீடநத மனறியெ யாளகென விடடருளப
பாவின முடிவைததுப பாரவெநதுந தநததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் தந்த போதே தனை தந்தது எம் இறை
வாள் தந்து ஞான வலியையும் தந்து இட்டு
வீடு அந்தம் அன்றியே ஆள்க என விட்டு அருள்
ஆவின் முடி வைத்து பார் வேந்தும் தந்ததே.

பதப்பொருள்:

தாள் (குருவாக வந்து தமது திருவடியை) தந்த (அடியவரின் உள்ளத்திற்குள் தந்த) போதே (அந்த கணமே) தனை (தன்னையும்) தந்தது (தந்து அருளுகின்றார்) எம் (எமது) இறை (இறைவன்)
வாள் (அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும்) தந்து (தந்து) ஞான (அந்த ஞானத்தை) வலியையும் (உபயோகிக்கும் பக்குவத்தையும்) தந்து (கொடுத்து) இட்டு (வைத்து)
வீடு (அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல்) அந்தம் (அவரின் உடலுக்கு அழிவும்) அன்றியே (இல்லாமல்) ஆள்க (இந்த உலகத்தையே ஆட்சி செய்) என (என்று) விட்டு (விட்டு) அருள் (தமது அருளை)
ஆவின் (அடியவரின் உயிருக்கு) முடி (கிரீடமாக) வைத்து (வைத்து அருளி) பார் (இந்த உலகத்தையே ஆளுகின்ற) வேந்தும் (அரச பதவியையும்) தந்ததே (தந்து அருளுகின்றார்).

விளக்கம்:

பாடல் #1590 இல் உள்ளபடி குருவாக வந்து தமது திருவடியை அடியவரின் உள்ளத்திற்குள் தந்த அந்த கணமே தன்னையும் தந்து அருளுகின்றார் எமது இறைவன். அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும் தந்து அந்த ஞானத்தை உபயோகிக்கும் பக்குவத்தையும் கொடுத்து வைத்து, அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல் அவரின் உடலுக்கு அழிவும் இல்லாமல் இந்த உலகத்தையே ஆட்சி செய் என்று விட்டு, தமது அருளை அடியவரின் உயிருக்கு கிரீடமாக வைத்து அருளி, இந்த உலகத்தையே ஆளுகின்ற அரச பதவியையும் தந்து அருளுகின்றார்.

பாடல் #1590

பாடல் #1590: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்
பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
வுவந்த குருபத முள்ளத்து வந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இசைந தெழுமனபி லெழுநத படியில
பசைந திடுமீசனார பாசதது ளெகச
சிவநத குருவநது செனனிகை வைகக
வுவநத குருபத முளளதது வநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியில்
பசைந்து இடும் ஈசனார் பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்தே.

பதப்பொருள்:

இசைந்து (இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில்) எழும் (எழுகின்ற) அன்பில் (உண்மையான அன்பில்) எழுந்த (இறைவன் எழுந்து) படியில் (அருளியதால்)
பசைந்து (அடியவரோடு ஒன்றாக சேர்ந்து) இடும் (இருக்கின்ற) ஈசனார் (இறைவனார்) பாசத்து (அடியவரின் பாசத் தளைகளை) உள் (அவருக்குள்ளிருந்து) ஏக (விலகும் போகும் படி செய்து)
சிவந்த (அருள் வடிவமான பரம்பொருளே) குரு (குருவாக) வந்து (வந்து) சென்னி (அடியவரின் தலையின் மேல்) கை (தமது திருக்கைகளை) வைக்க (வைத்து அருளும் போது)
உவந்த (அந்த அருளால் மகிழ்ந்து) குரு (குருவாக வந்திருக்கும்) பதம் (இறைவனின் திருவடிகளானது) உள்ளத்து (அடியவரின் உள்ளத்திற்குள்) வந்தே (வந்து வீற்றிருக்கும்).

விளக்கம்:

இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற இறைவனார் அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகும் போகும் படி செய்து, அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது அந்த அருளால் மகிழ்ந்து இருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள் குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகளானது வந்து வீற்றிருக்கும்.