மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #3

25-5-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இக்காலம் வரை ஜபம் தியானம் நற்பணிகள் திருப்பணிகள் அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர் இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.

அன்பர்களே யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம். சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி. உதாரணமாக பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை அழிந்து போகும். இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள் கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.

அவசரம் ஆன்மிகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம். ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.

அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #2

கேள்வி: பலருக்கு இக்காலத்தில் ஓர் பெரும் குழப்பம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்கின்ற போது ஆலயத்திற்கு ஏன் செல்லுதல் வேண்டும்? அகம் தனிலோ எங்குமிருந்தோ அவனை வணங்க இயலுமே என்பது தான் அது. இதற்கு யாம் இங்கு விளக்கம் அளிக்க சித்தம் கண்டோம்.

முறையாக ஆலயம் அமைக்கக் கண்டால் அது ஆகம வாஸ்து சாஸ்திரங்கள் தொட்டே அமைக்கப்படுகிறது. இதன் விளைவால் பல வடிவ கோபுரங்களைக் காண்கின்றோம். முக்கியமாக அனைத்தும் ஓர் முக்கோண வடிவில் காண்பது சகஜமாகின்றது. ஆங்கிலமதில் இதை இக்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானமாக மாற்றிக் கொண்டனர். பிரமிட் என இக்காலத்தில் அழைக்கப்படுவதும் அதன் குணாதிசயங்களும் இக்காலத்தில் பலர் செப்புகின்றனர் எழுதுகின்றனர். இருப்பினும் இது அக்காலம் தொட்டே நமது பரதமதில் உண்டு என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம்.

ஆலயங்களில் சென்று வழிபட வேண்டாம் என எண்ணுகின்றவர்க்கு ஒன்று இங்கு நினைவூட்டுகின்றோம். அக்கால சம்பிரதாயங்களில் காலையில் எழுந்தபின் குளித்தபின் ஆலயத்திற்க்குச் சென்ற பின்பே மற்ற வேலைகள் தொடரும் என்பது ஒரு சகஜ வழி ஆனது. இதற்குக் காரணம் உண்டு. இத்தகைய வாஸ்து சாஸ்திரமதில் கட்டப்பட்ட ஆலயங்களில் சிறிது நேரம் சென்று அமர்ந்து விட்டாலே போதும் அங்கு அத்தகைய முக்கோண வடிவங்களிலிருந்தும் ஸ்தாபித்த சக்கரங்களில் இருந்தும் புறப்படும் மின் கதிர்கள் உடலிலுள்ள தீயவையை நீக்கிவிடுகின்றது. இதனால் ஆரோக்கியம் பல மடங்காக உயர்கின்றது என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம். பிரதானமாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஓர் பழைய ஆலயம் காணக் கூடும்.

இக்காலத்தில் நவீன வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வடிவம் அமைத்த ஆலயங்களை விட புரதான பழைமை வாய்ந்த வடிவமே மனிதனுக்கு நலம் தருகின்றது என்பதே எமது கருத்தாகின்றது. ஏனெனில் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு அமைப்பும் பொதுவாக மனித நலம் நோக்கியே அமைக்கப் பட்டுள்ளது என்று எடுத்துரைப்போமே. இதனால் நாஸ்திகன் என்று கண்டு கொண்டாலும் ஆலயங்களில் வெளிப் பிரகாரமதில் சிறிது நேரம் அமர்ந்து வந்தாலே நற்பயன்கள் கிட்டக்கூடும் என்றும் எடுத்துரைத்தோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1

1-4-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆதித்தனின் சூடும் வெகுவாகக் கூடும் காலத்தில் நன்றென வியர்வை சிந்தும் காலமாக இருக்கும். இவ்விதம் வியர்க்கும் காலத்தில் ஜில்லென்று காற்று வேண்டும் என ஆர்வம் மனதில் தோன்றுகிறது. இத்தகைய ஆர்வம் இறைவனைக் காணவேண்டும் என்கின்ற எண்ணத்திலும் உயர தானாக இறைவன் முன் வந்து நிற்பான் என்பது எமது கருத்தாகின்றது.

நாம் ஏதேனும் சுகத்தை எந்த அளவிற்கு விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு இறை நாட்டம் இருந்தால் இறைவன் வராது இருக்க இயலாது என்பது எமது கருத்தாம்.

சிவநாமம் எங்கும் பரவ வேண்டும் என்கின்ற கருத்து எமக்கு என்றும் உண்டு. இதற்குத் திருமந்திரம் ஒரு கருவியாக நிலைத்தால் ஆனந்தமே இதை மக்கள் பின்பற்றி வந்தால் பேரானந்தமே இதுவே எமது கருத்தாகும்.

ஒன்று செய் அதை நன்று செய் என்று சொன்னாற் போல் நமது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்குவீர்களாக. தானாக கோடைக் காலங்களில் தாகத்தை தீர்த்திட நீர் தேடுவது போல இறைவனை நாட அவன் உங்கள் முன் காட்சி அளிப்பதோடு மட்டுமின்றி முழுமையாக அருள்புரிவான்.