பாடல் #470: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
விளக்கம்:
ஆன்மா தனது வினையின் பயனால் பிறவி எடுக்க உடலை படைத்து உடலுக்குள் ஆன்மாவை வைத்து தேவையான காலத்திற்கு வாழும்படி உயிரையும் வைத்து தேவைக்கேற்ப திறந்து மூடிக்கொள்ளுகின்ற ஒன்பது துவாரங்களைக் கொண்ட உறுதியான உடலையும் வைத்து அந்த உயிர் பிறவியில்லா நிலையை அடைய அந்த உடலின் தலையின் உச்சியின் இறுதியில் சகஸ்ரரதளத்தில் ஆயிரம் இதழ் தாமரையின் மேல் நெருப்பு வடிவமாகத் தங்கியும் இருப்பதைக் கண்டு அவனோடு பேரின்பத்தில் கலந்து திளைத்து நின்றேன்.
உட்கருத்து: ஆன்மா தான் கொண்ட ஆசையினாலும் வினையினாலும் பிறவி எடுக்கின்றது. அந்தப் பிறவிச் சுழலிலிருந்து தப்பிக்க உடலில் ஆறு ஆதார சக்தி மயங்களிலும் உச்சியில் ஏழாவது இடமாக சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேலே நெருப்பு வடிவமாக இருக்கும் இறைவனை உயிர்கள் உணர்ந்தால் பிறவி இல்லாத பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.
