பாடல் #400

பாடல் #400: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

விளக்கம்:

ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, மண் ஆகிய பஞ்ச பூதங்களும். சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய பஞ்ச தெய்வங்களும் என்றும் அழியாத மாபெரும் சக்தியினுள்ளிருந்தே தோன்றியவர்களாகும். பஞ்ச தெய்வங்களில் உருவமில்லாமல் அருவமாக முதலில் தோன்றிய சிவனிடமிருந்து தூல உருவமுள்ள மகேசுவரன் தோன்றி மகேசுவரனிடமிருந்து உருத்திரன் தோன்றி உருத்திரனிடமிருந்து திருமால் தோன்றி திருமாலிடமிருந்து பிரம்மன் தோன்றினான். அதுபோலவே பஞ்ச பூதங்களில் உருவமில்லாத அருவமாக முதலில் தோன்றிய ஆகாயத்திலிருந்து சூட்சும உருவமான வாயு தோன்றி வாயுவிலிருந்து தூல உருவமான நெருப்பு தோன்றி நெருப்பிலிருந்து நீர் தோன்றி நீரிலிருந்து நிலம் தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்தே உலகம் என்ற பொருள் தோன்றி கண்ணால் காண முடியும்படி அளிக்கப்பட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.