பாடல் #1128

பாடல் #1128: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இன்பக் கலவியி லிட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாமெங்க ளப்பனுந்
துன்பக் குழம்பிற் துயருறு பாசத்துள்
என்பிற் பராசக்தி யென்னம்மை தானே.

விளக்கம்:

பாடல் #1127 இல் உள்ளபடி உன்மையான அன்போடு நேசிக்கின்ற அடியவர்களின் உள்ளுக்குள் வந்து வீற்றிருக்கின்ற இறைவன் அவர்களை பேரின்பத்தில் ஆழ்த்தி இருக்கும்படி செய்து அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பில் வீற்றிருந்து ஆருயிர்களின் தந்தையாக இருக்கின்றார். அடியவர்கள் இந்த உலகத்தில் ஆசையினாலும் பாசத்தினாலும் எடுத்த பிறவியில் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தாங்குகின்ற அன்பை அருளுகின்றவளாக பரம்பொருளாகிய இறைவியும் அவர்களுக்குள் புகுந்து வீற்றிருந்து ஆருயிர்களின் தாயாக இருக்கின்றாள்.

கருத்து:

அடியவர்களின் உள்ளுக்குள் பூரண சக்தியாக இருக்கும் சிவசக்தி அம்மையும் அப்பனுமாக சேர்ந்தே வீற்றிருக்கின்றார்கள். உயிர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது அதை தாங்கிக் கொள்கின்ற பக்குவத்தை அன்பாக அம்மை அருளுகின்றாள். துன்பத்தை அனுபவித்துக் கழித்த உயிர்கள் இறைவனை நினைத்து உருகி கிடைக்கும் பேரின்பத்தை அனுபவிக்கும் போது அதிலிருந்து வெளிப்படுகின்ற தூய்மையான அன்பாக அப்பன் வீற்றிருக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.