பாடல் #1148

பாடல் #1148: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமு மண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

விளக்கம்:

பாடல் #1147 இல் உள்ளபடி சாதகருக்குள் விரும்பி வீற்றிருக்கும் மிகப் பெரும் தெய்வமாகிய இறைவியே நான்கு வேதங்களும் புகழ்ந்து சொல்லுகின்ற மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். இறைவன் இறைவி சாதகரின் ஆன்மா ஆகிய மூன்று ஜோதிகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நிற்கின்ற பூரண சக்தியாக அனைத்து திசைகளும் அவளுடைய அழகிய ஆடையாகவும் பூமியையும் கடந்து நிற்கின்ற திருவடிகளையும் கொண்டு நிற்கும் அவளை வேதங்களோடு அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களும் சிறப்பாக போற்றி வணங்குகின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.