பாடல் #1147

பாடல் #1147: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அம்பன்ன கண்ணி யரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செ யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

விளக்கம்:

அம்பைப் போன்ற கூர்மையான கண்களையும் என்றும் மாறாத இளமையுடனும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் மனோன்மணி எனும் பெயருடனும் கொம்பைப் போல மெலிந்து வளைந்த இடையுடனும் வாசனை மிக்க மலர்களைச் சூடிய கூந்தலுடனும் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள் முழுவதும் பரவி உலாவிக் கொண்டே இருக்கின்ற போது சாதகரின் உடலானது தூய்மையான தங்கத்தால் செய்ததைப் போல மாறி அவருக்குள்ளிருந்து நறுமணம் திரண்டு நாள் தோறும் வீசிக்கொண்டே இருக்கும். இப்படி சாதகம் செய்து வீற்றிருக்கின்ற சாதகரை அன்போடு பார்த்துக் கொண்டே இறைவியும் அவருடன் விரும்பி வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.