பாடல் #1133

பாடல் #1133: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அறிவான மாயையு மைம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரிற்
பிரியா வறிவறி வாருள்ளம் பேணும்
நெறிவாய சித்த நினைந்திருந் தாளே.

விளக்கம்:

உயிர்களின் உண்மை அறிவை மாயை மறைத்து இருப்பதால் அவர்களுக்குள் இருக்கும் ஐந்து புலன்களும் உலக அறிவை மட்டுமே கொடுக்கின்றன. இதை மாற்றி அவர்களின் மாயையை நீக்கி உண்மை அறிவைக் கொடுக்கின்ற இறைவியின் அருள் அவர்களுக்கு கிடைத்து விட்டால் அவர்களுக்கு இறைவனும் தாமும் வேறில்லை என்கிற பேரறிவு ஞானம் கிடைத்து விடும். அதன் பிறகு அவர்கள் தமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பதினால் இறைவியும் அவர்களின் சித்தத்தில் சேர்ந்து வீற்றிருப்பதை தமது செயலாக வைத்திருப்பாள்.

குறிப்பு:

பாடல் #1132 இல் உள்ளபடி தமக்குள் இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தரிசிக்க முடியும் என்கிற அறிவு இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு உண்மை ஞானத்தை கொடுக்கும் இறைவியின் அருள் கிடைத்து விட்டால் அவர்கள் தாமே இறைவனாக இருப்பதை உணர்ந்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள். இவர்கள் பேரின்பத்தில் இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பதால் இறைவியும் அவர்களின் சித்தத்துடன் சேர்ந்திருப்பதை தனது தர்மமாக வைத்திருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.