பாடல் #1602

பாடல் #1602: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம
லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு
மெய்த்தே னறிந்தே னவ்வேதத்தி னந்தமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைததெ னடிகண மனததினுள ளெநான
பொயததெ யெரியும புலனவழி பொகாம
லெயததெ னுழலு மிருவினை மாறறிடு
மெயததெ னறிநதெ னவவெதததி னநதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்தேன் அடி கண் மனத்தின் உள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இரு வினை மாற்றிடும்
மெய் தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.

பதப்பொருள்:

வைத்தேன் (வைத்தேன்) அடி (இறைவனை திருவடிகளை) கண் (எனது கண்களிலும்) மனத்தின் (மனதிற்கும்) உள்ளே (உள்ளே) நான் (யான்)
பொய்த்தே (உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே) எரியும் (அதிகமாக்குகின்ற) புலன் (ஐந்து புலன்களின்) வழி (வழியே) போகாமல் (மனம் போய் விடாமல்)
எய்த்தேன் (ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து சென்று) உழலும் (பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) மாற்றிடும் (மாற்றிடும்)
மெய் (உண்மையான) தேன் (பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக) அறிந்தேன் (அறிந்து கொண்டேன்) அவ் (அந்த) வேதத்தின் (வேதங்களின்) அந்தமே (எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை).

விளக்கம்:

இறைவனை திருவடிகளை எனது கண்களிலும் மனதிற்கு உள்ளேயும் யான் வைத்துக் கொண்டேன். அதனால் உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய் விடாமல் ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து செல்லும். அதனால் பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் மாற்றிடும் உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை யான் அறிந்து கொண்டேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.