பாடல் #1596

பாடல் #1596: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இதையத்து நாட்டத்து மென்றன் சிரத்தும்
பதியித்த வந்தப் பராபர னந்தி
கதிவைத்த வாறு மெய்காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இதையதது நாடடதது மெனறன சிரததும
பதியிதத வநதப பராபர னநதி
கதிவைதத வாறு மெயகாடடிய வாறும
விதிவைதத வாறும விளமபவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இதையத்து நாட்டத்தும் எந்தன் சிரத்தும்
பதிவித்த அந்த பரா பரன் நந்தி
கதி வைத்த ஆறும் மெய் காட்டிய ஆறும்
விதி வைத்த ஆறும் விளம்ப ஒண்ணாதே.

பதப்பொருள்:

இதையத்து (எமது இதயத்தில் இருக்கின்ற) நாட்டத்தும் (விருப்பத்திலும்) எந்தன் (எமது) சிரத்தும் (தலையின் மேலும்)
பதிவித்த (தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய) அந்த (அந்த) பரா (அசையா சக்தியாகிய) பரன் (பரம்பொருளாகவும்) நந்தி (குருநாதராகவும் இருக்கின்ற இறைவன்)
கதி (யாம் வீடு பேறு அடைவதற்காக) வைத்த (வைத்து அருளிய) ஆறும் (வழியையும்) மெய் (உண்மைப் பொருளை) காட்டிய (எமக்கு காட்டி அருளிய) ஆறும் (வழியையும்)
விதி (இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக) வைத்த (வைத்து அருளிய) ஆறும் (வழியையும்) விளம்ப (எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல) ஒண்ணாதே (இயலாது).

விளக்கம்:

எமது இதயத்தில் இருக்கின்ற விருப்பத்திலும் எமது தலையின் மேலும் தனது திருவடியை நீங்காமல் வைத்து அருளிய அந்த அசையா சக்தியாகிய பரம்பொருளாகவும் குருநாதராகவும் இருக்கின்ற இறைவன், யாம் முக்தி அடைவதற்காக வைத்து அருளிய வழியையும், உண்மைப் பொருளை எமக்கு காட்டி அருளிய வழியையும், இயல்பான வாழ்க்கையின் இறப்பு விதியை மாற்றி தம்மை வந்து அடைவதையே விதியாக வைத்து அருளிய வழியையும், எம்மால் வார்த்தைகளால் விவரித்து சொல்ல இயலாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.