பாடல் #1591

பாடல் #1591: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறை
வாடந்து ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்
பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாடநத பொதெ தனைததநத தெமமிறை
வாடநது ஞான வலியையுந தநதிடடு
வீடநத மனறியெ யாளகென விடடருளப
பாவின முடிவைததுப பாரவெநதுந தநததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் தந்த போதே தனை தந்தது எம் இறை
வாள் தந்து ஞான வலியையும் தந்து இட்டு
வீடு அந்தம் அன்றியே ஆள்க என விட்டு அருள்
ஆவின் முடி வைத்து பார் வேந்தும் தந்ததே.

பதப்பொருள்:

தாள் (குருவாக வந்து தமது திருவடியை) தந்த (அடியவரின் உள்ளத்திற்குள் தந்த) போதே (அந்த கணமே) தனை (தன்னையும்) தந்தது (தந்து அருளுகின்றார்) எம் (எமது) இறை (இறைவன்)
வாள் (அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும்) தந்து (தந்து) ஞான (அந்த ஞானத்தை) வலியையும் (உபயோகிக்கும் பக்குவத்தையும்) தந்து (கொடுத்து) இட்டு (வைத்து)
வீடு (அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல்) அந்தம் (அவரின் உடலுக்கு அழிவும்) அன்றியே (இல்லாமல்) ஆள்க (இந்த உலகத்தையே ஆட்சி செய்) என (என்று) விட்டு (விட்டு) அருள் (தமது அருளை)
ஆவின் (அடியவரின் உயிருக்கு) முடி (கிரீடமாக) வைத்து (வைத்து அருளி) பார் (இந்த உலகத்தையே ஆளுகின்ற) வேந்தும் (அரச பதவியையும்) தந்ததே (தந்து அருளுகின்றார்).

விளக்கம்:

பாடல் #1590 இல் உள்ளபடி குருவாக வந்து தமது திருவடியை அடியவரின் உள்ளத்திற்குள் தந்த அந்த கணமே தன்னையும் தந்து அருளுகின்றார் எமது இறைவன். அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும் தந்து அந்த ஞானத்தை உபயோகிக்கும் பக்குவத்தையும் கொடுத்து வைத்து, அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல் அவரின் உடலுக்கு அழிவும் இல்லாமல் இந்த உலகத்தையே ஆட்சி செய் என்று விட்டு, தமது அருளை அடியவரின் உயிருக்கு கிரீடமாக வைத்து அருளி, இந்த உலகத்தையே ஆளுகின்ற அரச பதவியையும் தந்து அருளுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.