பாடல் #227

பாடல் #227: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருகை இருத்திச்
சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

விளக்கம்:

முக்திக்கு வழிகாட்டும் பெரிய நெறியாகிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பொருளுணர்ந்து ஜெபித்து குருவானவர் வழிகாட்டிய நெறிகளையே பின்பற்றி குருவானவர் கூறிய மந்திர உரைகளையே எப்போதும் ஜெபித்து இறைவனை அடைய நான்கு வேதங்களிலும் (1. ரிக் வேதம், 2. யஜுர் வேதம், 3. சாம வேதம், 4. அதர்வண வேதம்) சொல்லப்பட்டிருக்கும் நெறிகளின்படி வாழ்ந்து அந்த நான்கு வேதங்களின் உட்பொருளாக இருக்கும் இறைவனை தமக்குள் வைத்து தியானித்து தமது உருவத்தையே இறைவனது உருவமாக பாவித்து தமது உடலில் உள்ள ஒவ்வொரு துகளிலும் இறைவனை பார்ப்பவர்கள் அந்தணர்கள்.

பாடல் #226

பாடல் #226: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி
நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே.

விளக்கம்:

காயத்ரி மந்திரத்தையும் சாவித்ரி மந்திரத்தையும் தமது கருத்தில் வைத்து விருப்பப்பட்டு ஆராய்ந்து அதன் பொருளை உணர்ந்து நாள் தோறும் அந்த மந்திரங்களையே மனதில் வைத்து தியானித்து இறையருளால் உணர்ந்த அன்பு எனும் தேரில் ஏறி அன்பையே தமது எண்ணத்தில் எப்போதும் வைத்து மாயையாகிய உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொள்ளாமல் வேதங்களின் முறைப்படியே வாழ்ந்து வருபவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

குறிப்பு: காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து இல்லாத மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். ஞானிகள், முனிவர்கள், யோகிகளால் மட்டுமே காயத்ரி மந்திரத்தை சொல்ல முடியும். ஏனெனில் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உருவாகும் சக்திகளை சாதாரண மனிதர்களால் தாங்க முடியாது. உடல் நிலை மனநிலை பாதிக்கும். தற்போது மனிதர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் காயத்ரி மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். தற்போது இருக்கும் கலியுகத்தில் மனிதர்களின் உடல்நிலை மனநிலை எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இறைவனை அடைய இறையருளால் ஓர் எழுத்து நீக்கப்பட்ட மந்திரமே சாவித்திரி மந்திரமாகும்.

பாடல் #225

பாடல் #225: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.

விளக்கம்:

அந்தணர்கள் எப்போதும் வேதங்களின் முடிவாக இருக்கின்ற வேதாந்தங்களைக் கேட்பதில் விருப்பத்தோடு இருக்க வேண்டும். மூன்று பதங்களைக் கொண்ட படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றின் முடிவாய் இருக்கின்ற ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகிய தத்துவமஸி (பரம்பொருள் நீயாக இருக்கிறாய்) என்பதை உணர்ந்து ஒலி மற்றும் வேதத்தின் முடிவாகிய இறைவனை இவன் தான் என்று தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே திளைத்து இருப்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

பாடல் #224

பாடல் #224: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

விளக்கம் :

அந்தணர் என்பவர் வேதங்களை ஓதுதல். கற்ற வேதங்களை பிறருக்கு கற்றுக்கொடுத்தல். வேத முறைப்படி யாகம் வளர்த்தல். பிறருக்கு யாகம் செய்யும் முறையை கற்றுக்கொடுத்தல். தானம் கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தருதல். பிறரிடமிருந்து தானம் பெறுதல் ஆகியவற்றை செய்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள். அதுமட்டுமின்றி 1.தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல் 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் தானும் அறிந்து பிறர் அறித்துகொள்ளச் செய்து நியமத்தின் வழி நடக்க வேண்டும். தாம் கடைபிடிக்கும் தவத்திலும் நல்ல காரியங்களைச் செய்யும் கருமங்களிலிருந்தும் எப்போதும் தவறாமல் நின்று நல்லது தீயது ஆகிய அனைத்து சடங்குகளையும் பிறருக்காக செய்து கொடுப்பவர்களே அந்தணர்கள் அவர்கள்.