பாடல் #230

பாடல் #230: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

நூலும் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காண நுவலிலே.

விளக்கம்:

பூணூலும் குடுமியும் அணிந்து கொண்டுவிட்டால் இறைவனை உணர்ந்த அந்தணர் என்று கூறிவிடமுடியாது. பூணூல் பருத்தியால் செய்யப்பட்டது. குடுமி தலையிலிருக்கும் மயிரை சிரைத்துச் செய்யப்பட்டது. பூணூலுக்கும் குடுமிக்கும் ஒருவரை இறைவனை உணர்ந்த அந்தணராக மாற்றும் சக்தி இல்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் கற்றவரின் குறியீடு. குடுமி என்பது இறை ஞானத்தைப் பெற்றவரின் குறியீடு. இறைவன் அருளிய வேதாந்தங்களை முறைப்படி தமது குருவின் மூலம் கற்று அவற்றின் பொருளை உணர்ந்து இறைவனை உணர்ந்து பூணூலும் குடுமியும் அணிந்துகொண்டவர்களே அந்தணர் என்னும் சொல்லுக்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.