பாடல் #235

பாடல் #235: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்த ஞானம் விளங்கும் விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

விளக்கம்:

வேதங்களையும் அதன் பொருளாகிய வேதாந்தங்களையும் குருவின் மூலம் கற்று ஞானம் பெறும் வழியைத் தமது கர்மவிதியின் காரணமாக பெற இயலாதவர்கள் ஓம் என்னும் நாதத்தின் முடிவாகிய ஞானத்தை வழங்கும் குருவின் போதனைகளை அவரைச் சரணடைந்து கற்று உணர்ந்து அதன்படி நடந்தால் அதுவே அவர்களுக்கு இறைவனின் திருவடியில் சென்று சேரும் அருளை வழங்கி ஓம் என்னும் நாதத்தின் முடிவான முக்தியையும் ஞானத்தின் முடிவான சித்தியையும் அவர்களுக்கு வழங்கிவிடும்.

கருத்து: தமது கர்ம விதியால் வேதங்களையும் வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவற்றின் மூலம் இறைவனை அடையும் வழியைப் பெற வாய்ப்பு இல்லாதவர்கள் குருவின் திருவடிகளைச் சரணடைந்து அவர் காட்டிய வழியில் நடந்தாலே அது அவரை இறைவனிடம் கொண்டு சேர்த்து அவருக்கு வேண்டிய ஞானத்தையும் முக்தியையும் வழங்கிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.