பாடல் #490: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
ஏனோர் பெருமைய னாகினும் எம்இறை
ஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தினது உள்ளே.
விளக்கம்:
அனைத்து தெய்வங்களையும் விட மாபெரும் பெருமையை உடைய எமது இறைவன் வினைகள் கர்மாக்கள் மலங்கள் கொண்ட குறைகள் நிறைந்த உயிர்களின் உடல்களிலும் கலந்து இருக்கின்றான். வானுலகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அளவு இருக்கும் மகாதேவனாகிய அந்த இறைவனை உயிர்கள் தனக்குள் தவம் செய்து தமக்குள்ளேயே அறியலாம்.
