பாடல் #480

பாடல் #480: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து சுக்கிலம் வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிக்கும் குறைவான அளவு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை குட்டையாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று மெலிந்து வெளிவந்தால் பிறக்கும் குழந்தை முடமாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று சீராக வராமல் தடை பட்டு தடை பட்டு வந்தால் பிறக்கும் குழந்தை கூனுடன் பிறக்கும். இப்படி வெளிவருகின்ற மூச்சுக்காற்றின் அளவைக் கணக்கிடும் முறை ஆண்களுக்குத் தானே தவிர பெண்கள் விடும் மூச்சுக் காற்றின் அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

குறிப்பு ஆணின் மூச்சுக்காற்று சுக்கிலத்திலிருந்து உயிரணுக்களைத் தருகின்றது. பெண்ணின் மூச்சுக்காற்று சுரோணிதத்திலிருந்து அழிக்கும் சக்தியைத் தருகின்றது (பாடல் #478 இல் இதற்கான விளக்கம் காண்க). உயிரின் ஆயுள் காலம் ஆணின் மூச்சுக்காற்றின் அளவிலிருந்து மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.