பாடல் #456

பாடல் #456: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.

விளக்கம்:

பூக்களின் மகரந்தத்தில் கலந்த காற்று உலகத்தில் பூவின் நறுமணத்தை பரப்பி காற்றிலேயே தங்க வைத்து அந்தக் காற்றை மற்ற உயிர்கள் சுவாசிக்கும் போது பூவின் நறுமணத்தை நுகரச் செய்வது போல தாயின் கருப்பைக்குள் இருக்கும் கருவிற்குள் புகுந்து இருக்கும் உயிரில் கலந்து இருக்கும் தனஞ்சயன் என்கிற காற்று அது குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாகப் பிறந்து முதன் முதலில் கூவி அழும் போது வெளிவந்து குழந்தையை முதன்முதலில் சுவாசிக்கச் செய்கிறது.

அறிவியல் விளக்கம்:

கருப்பைக்குள் இருக்கும் சிசு சுவாசிப்பது இல்லை. அதற்கு நுரையீரல்கள் உருவானாலும் அந்த நுரையீரல்களுக்குள் அமிலம் கலந்த நீரே நிரம்பியிருக்கும். கரு வளர்வதற்குத் தேவையான காற்றுக்களையும் சத்துக்களையும் தாயின் தொப்புள் கொடியின் மூலம்தான் எடுத்துக் கொள்கிறது. தொப்புள் கொடியில் இரண்டு நரம்புகள் இருக்கின்றது. அதில் முதலாவது நரம்பின் வழியே வரும் இரத்தத்தில் தாயின் மூச்சுக் காற்றும் தாய் சாப்பிட்ட உணவிலிருந்த சத்துக்களும் குழந்தைக்கு கிடைக்கின்றன. குழந்தை வெளிவிடும் நச்சுக் காற்றும் மற்ற கழிவுகளும் அமில நீரோடு சேர்ந்து இரண்டாவது நரம்பின் வழியே தாயிடம் வந்து தாயின் உடல் கழிவுகளோடும் மூச்சோடும் கலந்து வெளியேறுகின்றது. ஆகவே குழந்தையின் உடலில் காற்று இருந்தாலும் அது பிறந்த பிறகு வாய்விட்டு கூவி அழும்போதுதான் மூச்சுக்காற்றை முதன் முதலில் சுவாசிக்கின்றது. இதற்குக் காரணமாக இருப்பது தனஞ்சயன் எனும் காற்றாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.