பாடல் #451

பாடல் #451: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் பிறவி எடுக்கும் முன்பு அவற்றின் முன் ஜென்மத்தில் அவற்றை விட்டும் பிரிந்து இருந்த இருபத்தைந்து தத்துவங்களை ஒன்றாகச் சேர்த்து ஆதியாக இருக்கும் எமது ஆருயிரான இறைவன் உயிரை உருவாக்குகின்றான். உடலுடன் கூடிய உயிர் இந்த உலகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து அந்தக் கரு உருவாகும் போதே அதற்கு ஏற்றவாறு அந்தக் கர்ப்பப் பையின் உள்ளிருந்தே உடலுடன் கூடிய உயிரை உருவாக்கி அருளுகின்றான் இறைவன்.

இருபத்தைந்து தத்துவங்கள்:

5 பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். 5 புலன்கள்: கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள்: ஓசை – கேட்பது, ஊறு – உணர்தல், ஒளி – பார்ப்பது, சுவை – உண்பது, நாற்றம் – முகர்வது. 5 கன்மேந்திரியங்கள்: வாய் – பேச்சு, கைகள் – செயல், கால்கள் – போக்குவரவு, எருவாய் – கழிவு நீக்கம் பகுதி, கருவாய் – இன்பமும் பிறப்பும். 4 அந்தக்கரணங்கள்: மனம் – எண்ணங்கள், புத்தி – அறிவு, சித்தம் – சிந்தனை, அகங்காரம் – நான் எனும் நினைப்பு. 1 புருடன்: ஆன்மா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.