பாடல் #458

பாடல் #458: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.

விளக்கம்:

ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தை எதிர்த்துச் சென்றால் பிறக்கும் குழந்தை உருத்திரனை ஒத்த தாமச குணம் உடையதாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தை ஆணின் சுக்கிலம் எதிர்த்து சென்றால் பிறக்கும் குழந்தை திருமாலை ஒத்த சத்துவ குணம் உடையதாக இருக்கும். ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சமமாக எதிர்த்து இணைந்தால் பிறக்கும் குழந்தை பிரம்மனை ஒத்த இராசத குணம் உடையதாக இருக்கும். ஆணும் பெண்ணும் சமமான இன்பத்தில் இணைந்திருந்தால் பிறக்கும் குழந்தை மாபெரும் அரசன் போல ஆளும் தன்மையைக் கொண்டு இருக்கும்.

குணங்களின் விளக்கம்:

தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.

சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.

இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.