பாடல் #485: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடும் மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.
விளக்கம்:
குழந்தையின் உருவம் பத்து மாதங்களாகத் தாயின் கர்ப்பப் பைக்குள் கருவாக வளர்ந்து பூமியில் குழந்தையாக பிறந்து இளைஞன் முதியவன் ஆகிய பலவித பருவங்களாக வளர்ந்தாலும் தனக்குள் இருக்கும் இறைவனையும் தான் யார் என்பதையும் மாயையினால் அறியாமலேயே வளரும். எப்பொழுது அந்த உயிர் இறக்கின்றதோ அப்போது அதனின் உடலை விட்டு சூட்சுமமான ஆன்மாவாகத் திரும்பி போய்விடுவதை உலகத்தவர்கள் எவரும் அறிய மாட்டார்கள். மாயையினால் கட்டுண்டு இருக்கும் உலகத்தவர்கள் உயிர் ஆன்மாவாக இருப்பதையோ ஆன்மா இறைவனின் அம்சமாக இருப்பதையோ என்றும் அறியாமலேயே பிறந்து வாழ்ந்து இறந்து போகின்றனர்.
