பாடல் #1482

பாடல் #1482: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்கத் தார்க்கு முகத்தோடு பீடமுஞ்
சன்மார்கத் தார்க்கு மிடத்தோடு தெய்வமுஞ்
சன்மார்கத் தார்க்கும் வருக்கந் தெரிசன
மெய்மார்கத் தார்க்கு மியம்புவன் கேண்மினே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகத தாரககு முகததொடு பீடமுஞ
சனமாரகத தாரககு மிடததொடு தெயவமுஞ
சனமாரகத தாரககும வருககந தெரிசன
மெயமாரகத தாரககு மியமபுவன கெணமினெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கத்தார்க்கு முகத்தோடு பீடமும்
சன் மார்கத்தார்க்கும் இடத்தோடு தெய்வமும்
சன் மார்கத்தார்க்கும் வருக்கம் தெரிசனம்
மெய் மார்கத்தார்க்கும் இயம்புவன் கேண்மினே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்கத்தார்க்கு (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின்) முகத்தோடு (முகமே) பீடமும் (இறைவன் அமர்ந்து இருக்கின்ற பீடமாகவும்)
சன் (உண்மையான) மார்கத்தார்க்கும் (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்கள்) இடத்தோடு (இருக்கின்ற இடமே) தெய்வமும் (இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும்)
சன் (உண்மையான) மார்கத்தார்க்கும் (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின்) வருக்கம் (கூட்டத்தை) தெரிசனம் (காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்ற)
மெய் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ளுகின்ற) மார்கத்தார்க்கும் (வழியை தேடுகின்ற அனைவருக்கும்) இயம்புவன் (இதுவே வழி என்று யான் எடுத்து சொல்கின்றேன்) கேண்மினே (கேட்டுக் கொள்ளுங்கள்).

விளக்கம்:

உண்மையான வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின் முகமே இறைவன் அமர்ந்து இருக்கின்ற பீடமாகவும் அவர்கள் இருக்கின்ற இடமே இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும் அவர்களின் கூட்டத்தை காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்றது. தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ளுகின்ற வழியை தேடுகின்ற அனைவருக்கும் இதுவே வழி என்று யான் எடுத்து சொல்கின்றேன் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.