பாடல் #1485

பாடல் #1485: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

அன்னிய பாசமு மாகுங் கருமமு
முன்னு மவத்தையு மூலப் பகுதியும்
பின்னிய பாசமும் பேதாதி பேதமுந்
தன்னோடுங் கண்டவர் சன்மார்கத் தோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனனிய பாசமு மாகுங கருமமு
முனனு மவததையு மூலப பகுதியும
பினனிய பாசமும பெதாதி பெதமுந
தனனொடுங கணடவர சனமாரகத தொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
உன்னும் அவத்தையும் மூல பகுதியும்
பின்னிய பாசமும் பேத ஆதி பேதமும்
தன்னோடும் கண்டவர் சன் மார்கத்தோரே.

பதப்பொருள்:

அன்னிய (தனக்கு வேறாகவும் தன்னை அடிமைப்படுத்தியும் தன்னுள் அடங்கியும் இருக்கின்ற) பாசமும் (பாசத்தையும்) ஆகும் (அதற்கு காரணமாகும்) கருமமும் (கர்மத்தையும்)
உன்னும் (அந்த கர்மத்தின் பயனால் அனுபவிக்கின்ற) அவத்தையும் (அனைத்து வாழ்க்கை அனுவங்களையும்) மூல (அந்த அனுபங்களுக்கு மூலமாக இருக்கின்ற) பகுதியும் (ஆசைகளையும்)
பின்னிய (அதனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற) பாசமும் (பாசக் கட்டுகளையும்) பேத (அதனோடு சேர்ந்து இருக்காமல் விலகி இருக்கின்ற ஆன்மாவையும்) ஆதி (ஆதியில் முதன் முதலில் அந்த ஆன்மா) பேதமும் (இறைவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தையும்)
தன்னோடும் (தமக்கு உள்ளும் வெளியிலும்) கண்டவர் (கண்டு அறிந்து கொண்டவர்களே) சன் (உண்மையான) மார்கத்தோரே (வழியை கடை பிடிப்பவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

தனக்கு வேறாகவும் தன்னை அடிமைப்படுத்தியும் தன்னுள் அடங்கியும் இருக்கின்ற பாசத்தையும் அதற்கு காரணமாகும் கர்மத்தையும் அந்த கர்மத்தின் பயனால் அனுபவிக்கின்ற அனைத்து வாழ்க்கை அனுவங்களையும் அந்த அனுபங்களுக்கு மூலமாக இருக்கின்ற ஆசைகளையும் அதனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற பாசக் கட்டுகளையும் அதனோடு சேர்ந்து இருக்காமல் விலகி இருக்கின்ற ஆன்மாவையும் ஆதியில் முதன் முதலில் அந்த ஆன்மா இறைவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தையும் தமக்கு உள்ளும் வெளியிலும் கண்டு அறிந்து கொண்டவர்களே உண்மையான வழியை கடை பிடிப்பவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.