பாடல் #1486

பாடல் #1486: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தோரசிபாத வுண்மைச் சொரூபோ தையத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசுபாச நீககிப பதியுடன கூடடிக
கசியாத நெஞசங கசியக கசிவித
தொரசிபாத வுணமைச சொரூபொ தையததுற
றசைவான திலலாமை யானசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து
ஓர் அசி பாத உண்மை சொரூப உதையத்து உற்று
அசைவானது இல்லாமை ஆன சன் மார்கமே.

பதப்பொருள்:

பசு (ஆன்மாவில் இருகின்ற “நான்” எனும் எண்ணத்தையும்) பாசம் (பாசத் தளைகளையும்) நீக்கி (நீக்கி) பதியுடன் (இறைவனுடன்) கூட்டி (ஒன்று சேர்த்து)
கசியாத (எதனாலும் உருகாமல் இருக்கின்ற) நெஞ்சம் (நெஞ்சத்தையும்) கசிய (இறைவனின் மேல் கொண்ட தூய அன்பினால் உருகும் படி) கசிவித்து (உருக வைத்து)
ஓர் (ஒரு) அசி (ஆன்மாவாக இருப்பதுவே) பாத (இறைவனின்) உண்மை (பேருண்மை) சொரூப (சுய உருவமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை) உதையத்து (உருவாக்கி அதனை உணர வைத்து) உற்று (அதிலேயே இலயிக்க வைத்து)
அசைவானது (அசைவது என்பதே) இல்லாமை (இல்லாமல்) ஆன (ஆக்குகின்றது) சன் (உண்மை) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

ஆன்மாவில் இருகின்ற “நான்” எனும் எண்ணத்தையும் பாசத் தளைகளையும் நீக்கி இறைவனுடன் ஒன்று சேர்த்து எதனாலும் உருகாமல் இருக்கின்ற நெஞ்சத்தையும் இறைவனின் மேல் கொண்ட தூய அன்பினால் உருகும் படி உருக வைத்து ஒரு ஆன்மாவாக இருப்பதுவே இறைவனின் பேருண்மை சுய உருவமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்கி அதனை உணர வைத்து அதிலேயே இலயிக்க வைத்து அசைவில்லாமல் இருக்கும்படி ஆக்குகின்றது உண்மை வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.