பாடல் #1479

பாடல் #1479: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலையத் தோர்க்குத்
தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்கந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரிசிககப பூசிககச சிநதனை செயயப
பரிசிககக கீரததிககப பாதுகஞ சூடக
குருபததி செயயுங குவலையத தொரககுத
தருமுததி சாரபூடடுஞ சனமாரகந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட
குரு பத்தி செய்யும் குவலயத்தோர்க்கு
தரு முத்தி சார்பு ஊட்டும் சன் மார்கம் தானே.

பதப்பொருள்:

தெரிசிக்க (குருவை இறைவனாகவே தரிசிப்பதும்) பூசிக்க (அவரை பூசிப்பதும்) சிந்தனை (குருவின் திருவுருவத்தை தியானத்தில் சிந்தனை) செய்ய (செய்வதும்)
பரிசிக்க (குருவின் அருகாமையை அனுவிப்பதும்) கீர்த்திக்க (அவரது புகழை போற்றி பாடுவதும்) பாதுகம் (அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளை) சூட (தமது தலை மேல் சூடுவதும்)
குரு (ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்கு) பத்தி (பக்தியை) செய்யும் (முறைப்படி செய்கின்ற) குவலயத்தோர்க்கு (உலகத்தவர்களுக்கு)
தரு (அதன் பயனால் தருகின்ற) முத்தி (முக்தி நிலைக்கு) சார்பு (சார்பாக) ஊட்டும் (இருந்து அனுபவிக்க வைப்பது) சன் (உண்மையான) மார்கம் (வழி) தானே (ஆகும்).

விளக்கம்:

குருவை இறைவனாகவே தரிசிப்பதும் அவரை பூசிப்பதும் குருவின் திருவுருவத்தை தியானத்தில் சிந்தனை செய்வதும் குருவின் அருகாமையை அனுவிப்பதும் அவரது புகழை போற்றி பாடுவதும் அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளை தமது தலை மேல் சூடுவதும் ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்கு பக்தியை முறைப்படி செய்கின்ற உலகத்தவர்களுக்கு அதன் பயனால் தருகின்ற முக்தி நிலைக்கு சார்பாக இருந்து அனுபவிக்க வைப்பது உண்மையான வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.