பாடல் #1007: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)
நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியமனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு
மன்னு மனபவ னத்தொடு வைகுமே.
விளக்கம்:
தன்னை விரும்பி வரும் பிறர் மனைவியை விரும்பாதவர்களாகவும், ஐந்து புலன்களையும் அடக்கியவர்களாகவும், பாடல் #1003 #1004 மற்றும் #1005 உள்ள முறைகளின்படி தினந்தோறும் வழிபடுபவர்களாகவும், உடலிலுள்ள நெற்றி இரண்டு முழங்கைகள் மற்றும் இரண்டு முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி இறைவன் முன்பு விழுந்து வணங்குபவர்களாகவும், குருவின் மூலமாக பெற்ற மந்திரத்தை செபிப்பவர்களாகவும், உடலும் மனமும் பிராணனோடு (மூச்சுக்காற்றோடு) சேர்ந்து இருக்கும்படி வழிபடுபவர்களாகவும் இறைவனை அருச்சிப்பவர்கள் இருக்க வேண்டும்.
குறிப்பு: இறைவனை பூஜிப்பதில் ஒழுக்கமும் மனமும் எண்ணங்களும் முக்கியம் என்பதை இப்பாடல் விளக்குகின்றது. அவ்வாறு செய்யாத பூஜை பாடல் #1005 மற்றும் #1006 இல் உள்ள பலன்கள் எதையும் தராது.
