பாடல் # 813

பாடல் # 813 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

விளக்கம் :

சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பதினாறு. அது போல் கழுத்துப் பகுதி விசுத்திச் சக்கரத்தில் இருந்து வரும் கதிர்கள் பதினாறாய் இருந்தும், உடம்பில் அந்தந்த இடங்களின் அதிபதியாய் 224 கதிர்களாய் இருந்தும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாய் உள்ள பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

பாடல் # 812

பாடல் # 812 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.

விளக்கம் :

தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும் அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பக்கமாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும் அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மானசீகமாய் ஆதாரங்களில் வைத்து பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு அவர்களது உணர்வு வடிவாய் இறைவன் நிற்கின்றான்.

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? - ஆன்மிகம்

பாடல் # 811

பாடல் # 811 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

விளக்கம் :

உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு சிவபெருமானுடன் குடியிருந்து வாழ்பவர். எல்லாவுலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயினும் நல்லவராவர். பிறர் இவர் மீது கோபம் கொண்டாலும் இவர் நன்மையே செய்வார். தீவினையாளர்களின் தீவினைத் துன்பம் போக நோய்க்கு மருந்துபோல் தீவினையாளர்களுக்கு துன்பத்தை கொடுத்து தீயினும் கொடியராவர்.

பாடல் # 810

பாடல் # 810 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.

விளக்கம் :

சிவனை மனதில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை சக்தி ஒலி ஒளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள். கேசரி முத்திரையினால் அந்த ஒளி ஒலிகளில் மனத்தைப் பதித்து அதன் மீது தியானம் செய்தால் அந்த யோகியின் உடலே ஓர் கோயிலாகி விடும்.

பாடல் # 809

பாடல் # 809 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

விளக்கம் :

கேசரி யோகத்தைச் செய்து நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி அங்கு ஊற்றெடுக்கும் அமுதத்தை பருகி சிவாய நம என்ற ஐந்து எழுத்துக்களை சிந்தனை செய்பவர்களுக்கு ஓர் ஒளி வெள்ளம் நீர் வெள்ளம் போல முகத்தின் முன்பு பெருகும். (வியர்வை போல்) காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அந்த வான கங்கையை பெற்று அறிந்து கொள்ளுங்கள்.


பாடல் # 808

பாடல் # 808 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.

விளக்கம் :

கேசரியோகப் பயிற்சியால் வினைகள் சுழன்ற உடம்பினை இனித்த கரும்பு போல் ஆக்கிக்கொண்டவர்கள் நாவின் நுனியை மேல் நோக்கிக் குவித்துச் செலுத்தி கோங்கரும்பை போன்ற குண்டலியின் வளைவை நேராக்கினால் இந்த உடலிலேயே அமுதத்தைக் காணலாம்.

A Beautiful ShivLing somewhere in Mandi District of Himachal Pradesh a Heavenly Himalayan State of North India.. (A Shivling is a Significance of Lord/Bhagwan Shiva's Nirakaar { Shapeless } and Universal Form.. It's also Represent Bhagwan Shiv and His Better Half Goddess Parvati also known as Durga.. Aadishakti.. Bhagwati.. Gauri... Kali and many more names according to the love and devotion of her devotees.. !! A Shivling also represent Brahma.. Vishnu and Mahesh ( Shiv )  Om Namah Shivay.. ...

பாடல் # 807

பாடல் # 807 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே.

விளக்கம் :

பாவச் செயல்களைச் செய்ததனால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீ வினைகள் நம்மை வருத்தும் பொழுது அதனை போக்க வழி தெரியாமல் இருப்பவர்கள் நாவின் நுனியால் உண்ணாக்குத் தொளையை அடைக்கும் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்று விடலாம். பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து அவற்றால் விளையும் பயன்கள் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபட்டு கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் அதன் இனிமையைச் சுவைப்பர்.

bholenath hd wallpaper good morning #bholenath #hd #wallpaper * bholenath hd wallpaper ` bholenath hd wallpaper iphone ` bholenath hd wallpaper new ` bholenath hd wallpaper angry ` bholenath hd wallpaper black ` bholenath hd wallpaper with quotes ` bholenath hd wallpaper shayri ` bholenath hd wallpaper good morning

பாடல் # 806

பாடல் # 806 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

விளக்கம்:

குருநாதர் காட்டிய வழியில் நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அதனைச் செய்கின்ற யோகி உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அந்த யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் அறிவை நினைத்துக்கொண்டிருப்போர் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர் ஆவார்.

பாடல் # 805

பாடல் # 805 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லைக் கதவந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

விளக்கம்:

அண்ணாக்கின் அருகில் உள்ள பகுதியில் இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் மூச்சுக்காற்றை பயிற்சியின் மூலம் பொருத்தினால் யமன் பயம் இல்லை. உடலுக்கு அழிவு இருக்காது. மேலுலகத்து வாயிற் கதவு திறக்கும். நரை திரைகளும் மாறிவிடும். அதன்பின் யோகி உலகம் அறிய இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இது குருவான இறைவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.

பாடல் # 804

பாடல் # 804 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.

விளக்கம் :

ஊனால் ஆன உடம்பின் நெற்றி நடுவில் ஓர் ஓளி உள்ளது, அதனை தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை அறிபவர்கள் யாரும் இல்லை. வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை தெரிந்து கொண்டு அவ்ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள் அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள்.