பாடல் #1843: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
சாணகத் துள்ளே யழுந்திய மாணிக்கங்
காணு மளவுங் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சாணகத துளளெ யழுநதிய மாணிககங
காணு மளவுங கருததறி வாரிலலை
பெணிப பெருககிப பெருககி நினைவொரககு
மாணிகக மாலை மனமபுகுந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சாண் அகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.
பதப்பொருள்:
சாண் (ஒரு சாண் [ஒன்பது அங்குலம்] அளவிற்கு) அகத்து (உடலுக்கு) உள்ளே (உள்ளே) அழுந்திய (புதைந்து மறைவாக இருக்கின்ற) மாணிக்கம் (சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவை)
காணும் (அதன் உண்மை நிலையை பார்க்கும்) அளவும் (அளவிற்கும்) கருத்து (அதை உணர்ந்து அறிவதற்கும்) அறிவார் (ஏற்ற உண்மை அறிவு பெற்றவர்கள்) இல்லை (எவரும் இல்லை)
பேணி (அப்படி உண்மை நிலையை உணர்ந்து பார்க்கும் அறிவு பெற்றவர்கள் அதை இறைவனின் அம்சமாக உணர்ந்து போற்றி) பெருக்கி (தமது புறமாகிய உடலையும் உடல் சார்ந்த உணர்வுகளையும் குறைத்து ஆன்மாவின் நிலையை பெரிதாக வெளிவரும் படி) பெருக்கி (அதிகமாக்கி) நினைவோர்க்கு (அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால்)
மாணிக்க (அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க) மாலை (மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன்) மனம் (அவர்களின் மனதிற்குள்) புகுந்தானே (புகுந்து வீற்றிருப்பான்).
விளக்கம்:
உயிர்களின் உடலுக்குள்ளே ஒரு சாண் (ஒன்பது அங்குலம்) அளவிற்கு ஆழமாக புதைந்து மறைந்து இருக்கின்ற சிவந்த மாணிக்கமாகிய ஆன்மாவின் உண்மையான நிலையை பார்க்கவும் அதை உணர்ந்து அறிவதற்கும் ஏற்ற உண்மையான அறிவு பெற்றவர்கள் இல்லை. அப்படி உண்மை அறிவைப் பெற்று தமக்குள் புதைந்து மறைந்து இருக்கின்ற ஆன்மாவானது இறைவனின் அம்சமே என்பதை உணர்ந்து, அதைப் போற்றி வணங்கி தமது புற உடலையும் வெளிப்புற உணர்வுகளையும் குறையச் செய்து, தமக்குள்ளே இருக்கும் ஆன்மாவின் அம்சத்தை பெரியதாக்கி வெளிப்படச் செய்து, அதிலேயே தியானித்து இருக்க முடிந்தால், அவர்களை தமது திருமார்பில் அணிந்து கொள்ளும் மாணிக்க மாலையாக ஏற்றுக்கொண்டு இறைவன் அவர்களின் மனதிற்குள் புகுந்து வீற்றிருப்பான்.
