பாடல் # 803

பாடல் # 803 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

நாவின் நுனியை நடுவே விசிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.

விளக்கம் :

நான்கு வகை யோகங்களுள் ஒன்றான அடயோக முறைப்படி நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவ மந்திரம் கேட்கும். அந்த சாதகம் செய்யும் உயிருடன் சிவனும் கலந்து சேர்ந்து அதன் உடலையே தனக்கு விருப்பமான உறைவிடமாக கொண்டு தங்குவார். அங்கே மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தோன்றுவார்கள். அந்த உயிருக்கு நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இருக்காது.

பாடல் # 802

பாடல் # 802 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

விளக்கம் :

யோக நூல்களை ஆராய்ந்து அதனை முறையோடு செய்தால் உடம்பிலிருந்து அமுதம் சுரக்கும். அந்த அமுதம நாடிகளில் பாய்கின்றபோது ஓர் ஒலியை எழுப்பும். அந்த ஒலி சந்திர மண்டலமாக விளங்கி நரை, திரை, பிணி, மூப்பு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கும்.

om namah shivaya good morning image #good #morning #om #namah #shivaya #goodmorning / good morning om namah shivaya , om namah shivaya good morning quote , om namah shivaya wallpaper good morning , om namah shivaya quotes good morning , om namah shivaya good morning telugu , om namah shivaya mantra good morning , om namah shivaya good morning image , om namah shivaya with good morning

பாடல் # 801

பாடல் # 801 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

விளக்கம் :

இடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே மூச்சுக்காற்றை செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் சோர்வு ஏற்படாது. உறங்கும் காலத்தில் உறக்கத்தை விட்டு பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.

பாடல் # 800

பாடல் # 800 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

விளக்கம் :

வண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.

பாடல் # 799

பாடல் # 799 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.

விளக்கம்:

மூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வேண்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு மரணம் இல்லை.

பாடல் # 798

பாடல் # 798 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும், திசைகளும்)

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வளமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

விளக்கம்:

வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் மேலும் மேலும் தீமை அதிகரிக்கும்.

குறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

பாடல் # 797

பாடல் # 797 : மூன்றாம் தந்திரம் – 17. வார சூலம் (பயணம் செய்ய தவிர்க்க வேண்டிய நாட்களும் திசைகளும்)

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

விளக்கம்:

திங்கள் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய் புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.

குறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

Share image

பாடல் # 796

பாடல் # 796 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.

விளக்கம் :

யோகிகள் உள் நோக்கி தியானம் செய்து ஆராயும் பொருள் முழுமுதற்சிவனாகும், ஆராய்ந்த சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். பதினாறு மாத்திரை அளவு செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் அந்த சிவனை நன்கு உணரலாம். அவ்வாறு உணர்ந்தால் வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, மாதம், ஆண்டு முகூர்த்தம் ஆகியவை காரணப்பொருளாக இருந்து உயிரின் ஆயுளை அதிகரிக்கும்.

பாடல் # 795

பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

விளக்கம் :

மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

பாடல் # 794

பாடல் # 794 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக யோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

விளக்கம் :

பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.