பாடல் #511

பாடல் #511: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.

விளக்கம்:

உயிர்கள் தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தில் மூழ்கி குளித்தால் தமக்குள் இருக்கும் இறைவன் ஒருவனை உணரலாம். அந்த இறைவனுக்கு அடியவர் போல நடித்துக் கொண்டாவது அவனோடு கலந்து அவனை அறிந்து கொள்ளுபவர்கள் எவரும் இல்லை. நதிகளுக்கும் குளங்களுக்கும் சென்று மூழ்கி எழுபவர்களது பாவ வினைகள் கிணற்றில் விட்ட ஓட்டைக் குடம் போன்றதே ஆகும்.

உள்விளக்கம்: ஓட்டையான குடத்தில் எவ்வளவு முறை அள்ளினாலும் தண்ணீர் நிற்காதது போல உலகத்திலுள்ள எத்தனை குளங்களுக்கும் நதிகளுக்கும் சென்று குளித்தாலும் பாவ வினைகள் தீராது.

பாடல் #510

பாடல் #510: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

விளக்கம்:

கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் முறையை அறிந்தவர்க்கு இறைவனின் அருள் குளிச்சியாய் தோன்றும். அவனே அந்த கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளித்தால் பாவங்கள் தீர்ந்து விடும் என்றும் இறைவனை அடைந்து விடலாம் என்றும் எண்ணினால் இறைவன் பக்கத்தில் கூட நிற்க மாட்டான். அவனே மூச்சை அடக்கி அளவாக விட்டு முறைப்படி தியானம் செய்யத் தெரிந்து அதை செயல்படுத்தினால் இறைவனின் அருள் கிடைத்தாலும் கிடைக்கும். அவனே தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தை உணர்ந்து தெளிந்து விட்டால் அவன் சிந்தனையில்தான் இறைவன் எப்போதுமே குடிகொண்டிருக்கின்றான்.

பாடல் #509

பாடல் #509: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடையக் கல்வியி லோரே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்துக்குள் பலவித புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றை தியானத்தின் மூலம் மெள்ள ஆராய்ந்து உணர்ந்து அதனுள் மூழ்கிக் குளித்து தங்களின் வினைகளை நீங்க முயற்சி செய்யாமல் தங்களின் வினைகளைக் கழிக்க உலகத்தில் இருக்கும் புனித தீர்த்தங்களைத் தேடி பள்ளத்தாக்குகளுக்கும் மலை மேடுகளுக்கும் அலைந்து திரிகின்றவர்கள் பொய்யான மனதைக் கொண்ட உண்மை ஞானமில்லாதவர்கள்.

உட்கருத்து: உயிர்களின் உள்ளத்துக்குள் இறைவன் பலவித குணங்களாக இருக்கின்றான். இவற்றை ஆராய்ந்து நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டு தீய குணங்களை நீக்கிக் கொண்டால் வினைகள் நீங்கி விடும். இதை அறியாமல் உலகத்தில் இருக்கும் நதிகளிலும் குளங்களிலும் குளித்துவிட்டால் எல்லா பாவங்களும் போய்விடும் என்று தம்மைத் தாமே பொய்யாக ஏமாற்றி கொள்ளுபவர்கள் உண்மை ஞானமில்லாதவர்கள்.

பாடல் #508

பாடல் #508: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

விளக்கம்:

தம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு மலையளவு மாபெரும் பொருளை தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும் இறைவனை நினைக்காமல் தானம் பெற்ற இருவருமே ஏழு வித நரகங்களின் குழியை சென்று அடைவார்கள்.

பாடல் #507

பாடல் #507: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

விளக்கம்:

ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் பஞ்சமகா பாவங்களை செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும் குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும் காமம் மற்றும் பஞ்சமாக தீயகுணங்களை கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தை தந்து அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால் மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

உட்கருத்து: மகாபாவத்தை செய்தவர்களாக இருந்தாலும் முறையான தானத்தை சரியானவர்களுக்குச் செய்துவிட்டால் அதன் பயனால் பாவ வினைகள் தீர்ந்து நல் வினைகளைச் சேர்த்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

ஐந்து மகா பாவங்கள் (பாடல் #200 இல் காண்க):

  1. கொலை – தெரிந்தே ஒரு உயிரைக் கொல்வது
  2. களவு – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடுவது
  3. கள் – போதையில் மயங்கிக் கிடப்பது
  4. காமம் – மோகத்தில் மயங்கிக் கிடப்பது
  5. பொய் – உண்மையை மறைத்துப் பொய் பேசுவது

ஐந்து மகா தீய குணங்கள்:

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை

பாடல் #506

பாடல் #506: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.

விளக்கம்:

தவம் யோகம் செய்து தீய குணங்களை போக்கி நன்மைகளைச் செய்து அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேஷம் போட்டுக் கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மனதில் உண்மையான அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பாடல் #505

பாடல் #505: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.

விளக்கம்:

மடி வற்றிப்போன பசுமாடு அழகாக இருக்கிறதே என்று குனிந்து அதற்கு புற்களை உணவாகக் கொடுத்து அதன் மடியிலிருந்து பாலைக் கறந்து குடித்து விடலாம் என்று நினைப்பது ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பேரின்ப வாழ்வைப் பெற்று விடலாம் என்று நினைப்பது போலாகும். ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானம் பருவம் முடிந்த பிறகு விதைத்த பயிர் எப்படி வளர்ந்து செழிக்காதோ அதுபோல எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணாகிவிடும்.

உள்விளக்கம்: ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்கள் தானம் பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #504

பாடல் #504: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்கின்ற இளங்கிளை யோனே.

விளக்கம்:

உலகங்களும் உயிர்களும் உருவாகும் காலத்தில் உருவாகி அழியும் காலத்தில் அழிகின்றன. உயிர்களின் வினைகள் தீர்க்க தீர்க்க வினைகள் சென்று விடும். உயிர்கள் செய்யும் கர்மங்களால் வினைகள் வந்தும் சேரும். இவை எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் குருவாக இருக்கும் இறைவன் காட்டியருள அதைக் கண்டவர்கள் இறைவனின் கட்டளையைப் பெற்று அதைச் செயல்படுத்தும் தகுதி பெற்ற புதிய அடியவர்கள் ஆவார்கள்.

உட்கருத்து: அனைத்தும் இறைவனே என்ற உண்மையை இறைவன் காட்டத் தமக்குள் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனின் கட்டளையை செயல் படுத்தும் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #503

பாடல் #503: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட்டு இலாத இடிஞ்சிலு மாமே.

விளக்கம்:

வினைப் பயனால் பிறவி எடுத்த போது கருவாக உருவான போதிலிருந்தே யாம் இறை நினைப்பை கைவிடாது பற்றிக் கொண்டேன். உயிர்கள் அனைத்துமாக இருக்கும் உண்மை இறைவனின் திருவடிகளையே எனக்குள் தேடி கயிறு போல பின்னிய சடையை தலையில் அணிந்த இறைவனின் திருஉருவத்தை எனக்குள் கண்டு அவனது திருவடிகளையே சரணடைந்தேன். அதனால் நெய் விட்டு எரிக்கப்படுகின்ற உலக விளக்குகளைப் போல இல்லாமல் நெய்யே விடாமல் தானாக ஒளிரும் விளக்காக எனக்குள் இறைவன் வந்து இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

உட்கருத்து: பொய்யான உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு உண்மையான இறைவனையே முழுவதுமாகப் பற்றிக்கொண்ட உயிர்கள் தான் இறைவனைத் தமக்குள் ஒளி வடிவமாகத் தரிசிக்கத் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #502

பாடல் #502: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுஉணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

விளக்கம்:

எமனால் உயிர்கள் ஒரு நாள் இறந்து போவதைப் பார்த்தாலும் தாமும் அப்படி ஒரு நாள் இறந்து போவோம் என்பதை உணராமல் உயிர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஒவ்வொரு உயிருக்குள்ளும் அந்த உயிரையே தனது அம்சமாகக் கொண்டு இருக்கும் இறைவன் தமக்குள்ளும் இருக்கின்றான் என்பதையும் உணராமல் இருக்கின்றனர். உலக வாழ்க்கையை விட நன்மை தருவது பேரின்பப் பெருவாழ்வு என்பதை உணர்ந்து அன்பாலும் தவத்தாலும் தேடிச் சென்று தமக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் சிலர் மட்டுமே இறைவனின் அருள் பெற்று தேவர்களாக பதவி பெறுகிறார்கள்.

உட்கருத்து: விரைவில் முடியும் உலக வாழ்க்கை மேல் ஆசை வைக்காமல் என்றும் நிரந்தரமான பேரின்பப் பெருவாழ்வுதான் வேண்டும் என்று உணர்ந்த உயிர்கள் மட்டுமே இறைவனின் அருளைப் பெறுவதற்கு தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.