பாடல் #509

பாடல் #509: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடையக் கல்வியி லோரே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்துக்குள் பலவித புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றை தியானத்தின் மூலம் மெள்ள ஆராய்ந்து உணர்ந்து அதனுள் மூழ்கிக் குளித்து தங்களின் வினைகளை நீங்க முயற்சி செய்யாமல் தங்களின் வினைகளைக் கழிக்க உலகத்தில் இருக்கும் புனித தீர்த்தங்களைத் தேடி பள்ளத்தாக்குகளுக்கும் மலை மேடுகளுக்கும் அலைந்து திரிகின்றவர்கள் பொய்யான மனதைக் கொண்ட உண்மை ஞானமில்லாதவர்கள்.

உட்கருத்து: உயிர்களின் உள்ளத்துக்குள் இறைவன் பலவித குணங்களாக இருக்கின்றான். இவற்றை ஆராய்ந்து நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டு தீய குணங்களை நீக்கிக் கொண்டால் வினைகள் நீங்கி விடும். இதை அறியாமல் உலகத்தில் இருக்கும் நதிகளிலும் குளங்களிலும் குளித்துவிட்டால் எல்லா பாவங்களும் போய்விடும் என்று தம்மைத் தாமே பொய்யாக ஏமாற்றி கொள்ளுபவர்கள் உண்மை ஞானமில்லாதவர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.