பாடல் #507

பாடல் #507: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

விளக்கம்:

ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் பஞ்சமகா பாவங்களை செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும் குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும் காமம் மற்றும் பஞ்சமாக தீயகுணங்களை கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தை தந்து அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால் மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

உட்கருத்து: மகாபாவத்தை செய்தவர்களாக இருந்தாலும் முறையான தானத்தை சரியானவர்களுக்குச் செய்துவிட்டால் அதன் பயனால் பாவ வினைகள் தீர்ந்து நல் வினைகளைச் சேர்த்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

ஐந்து மகா பாவங்கள் (பாடல் #200 இல் காண்க):

  1. கொலை – தெரிந்தே ஒரு உயிரைக் கொல்வது
  2. களவு – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடுவது
  3. கள் – போதையில் மயங்கிக் கிடப்பது
  4. காமம் – மோகத்தில் மயங்கிக் கிடப்பது
  5. பொய் – உண்மையை மறைத்துப் பொய் பேசுவது

ஐந்து மகா தீய குணங்கள்:

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.