பாடல் #356

பாடல் #356: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேஅவ ராகிய காரணம்
அப்பரி சேஅங்கி யுள்நாளும் உள்ளிட்டு
அப்பரி சேஆகி அலர்ந்திருந் தானே.

விளக்கம்:

தக்கன் செய்த யாகத்தில் அவிர்பாகத்தைப் பரிசாகப் பெற்ற பிரம்மன் திருமால் மற்றும் அனைத்து தேவர்களும் இறைவனே தாமாக இருக்கும் காரணத்தை அறிந்து தமது அறியாமையால் பிழை செய்துவிட்டோமே என்று வருந்தி அவனது திருவருளை வேண்டி நின்றனர். அக்கினிதேவனும் தமக்குள் தீயாகவும் ஒளியாகவும் வெப்பமாகவும் என்னாளும் இருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து அவனது திருவருளை வேண்டி நின்றான். அவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவனும் அனைவரின் பிழைகளை மன்னித்து ஒளிமயமாகி எங்கும் வியாபித்து இருந்தான்.

உட்கருத்து: உயிர்கள் அறியாமையால் செய்யும் தவறுகளிலும் அணுவாய் கலந்திருக்கும் இறைவன் உயிர்கள் தன் தவறை உணரும் போது அவர்களை மன்னித்து அருள்செய்வான்.

Related image

பாடல் #355

பாடல் #355: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகில்
அப்பரி சேஅது நீர்மை யுள்கலந்து
அப்பரி சேசிவனாய் ஆவிக்கின் றானே.

விளக்கம்:

இறைவனை அழிக்க தக்கன் செய்த மாபெரும் யாகத்தில் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு அவிர்பாகங்களை ஏற்க வந்த பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவருக்கும் அவரவர் தொழில்களைப் பரிசாக அளித்து அந்தத் தொழில்களைச் செய்யும் சக்தியாகவும் இருக்கும் இறைவனை அழிக்க யாகத்தில் மாபெரும் அக்னி வந்தது அதிசயமாக தெரிந்தாலும். தீயாகவும் தீயை வளர்க்க யாகத்தில் இடும் பொருட்களாகவும் அந்த பொருளின் தன்மையாகவும் அதனை ஏற்று ஆவியாக்குபவனும் இறைவனே.

உட்கருத்து: உயிர்கள் நல்செயல்கள் செய்தால் நல்வினைகள் கிடைத்து சிவனின் அருளும், தீய செயல்கள் செய்தால் தீவினைகள் சேர்ந்து அதற்கான தண்டனைகளும் உயிருக்கு கிடைக்கும் இவை அனைத்திலும் சிவன் அணுவாய் கலந்திருப்பான். அனைத்தும் இறைவனே ஆவதால் நல்லவையானாலும் தீயவையானாலும் அவனின்றி எந்தச் செயலும் நிகழாது.

Related image

பாடல் #354

பாடல் #354: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லாதானும் அருள்புரிந் தானே.

விளக்கம்:

தக்கன் யாகத்தையும் அதைச் செய்ய முற்பட்டவர்களையும் அதை ஏற்றுக்கொண்ட தேவர்களையும் இறைவனின் பைரவ அவதாரமான வீரபத்திரர் அளித்த தண்டனையை கண்டு யாகத்தீயில் இருந்து எழுந்து வந்த திருமால் இறைவனே தவறு செய்தவன் இவனல்ல உலகினில் பிறந்த சதியின் மேல் வைத்த பாசத்தாலும் கொண்ட பந்தத்தாலும் அறிவிழந்து இவன் செய்த யாகத்தின் அவிர்பாகத்தை ஏற்றுக்கொண்ட நாங்களே பெரும் தவறு செய்தவர்கள் எம்மை மன்னித்து அருளுங்கள் என்று கூறி இறைவனின் திருவடிகளில் விழுந்து தொழ என்றுமே இறப்பில்லாத இறைவனும் அவர்களுக்கு அருள் புரிந்தான்.

உட்கருத்து: மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி பந்த பாசத்தினால் செயல்களை செய்தால் அந்த செயல் இறையருள் இல்லாமல் பூர்த்தியாகாமல் இருக்கும் அதை உணர்ந்து உயிர்கள் பந்த பாசத்தில் இருந்து விடுபட்டு இறையருளுடன் செய்யும் போது இறைவன் அந்த உயிருக்கு அருள் செய்வான்.

Related image

பாடல் #353

பாடல் #353: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (வேள்வியின் தத்துவம்)

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிதைந்தனர் அண்ணல் சினஞ்செய்த போதே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் இறைவனுக்குத் தரும் அவிர்பாகத்தையும் அவருக்குத் தராமலும் அவரை மதிக்காமலும் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் ஒன்றை செய்தான் தக்கன். அவனது அறியாமையைக் கண்டு கோபமுற்ற ஈசன் அந்த யாகத்தையும் அவனது செறுக்கையும் அழித்து அவனக்கு நல் அறிவைக் கொடுக்க மறக்கருணை கொண்டு வீரபத்திரர் எனும் பைரவ அவதாரத்தை அந்த மாபெரும் யாகத்தின் தீயிலிருந்து வெளிப்பட்டார். அந்த மாபெரும் யாகத்தை செய்தவர்கள் மற்றும் அதை ஏற்க வந்த தேவர்களும் இறைவனின் கோப முக தரிசனத்தைப் பார்த்த மறுகணமே அவனது அருளன்றி இந்த யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாதென்பதை அறிந்து இறைவனின் கோபத்தைக் கண்டு மிகவும் அஞ்சி தமது நிலை தடுமாறி எல்லாத் திசையிலும் சிதைந்து போனார்கள்.

உட்கருத்து: தாம் செய்யும் எந்த செயலானாலும் மனம் வாக்கு உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி இறையருளுடன் செய்வது வேள்வியாகும். மனம், வாக்கு, உடம்பு மூன்றை மட்டுமே வைத்து இறையருள் இல்லாமல் செய்வது தக்கன் வேள்வியாகும்.

Related image

பாடல் #352

பாடல் #352: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.

விளக்கம்:

தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.

உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.

Image result for lingam

பாடல் #351

பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.

உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.