பாடல் #521

பாடல் #521: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

விளக்கம்:

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அதோமுகம் பூமி அனைத்துக் கோள்கள் பல நட்சத்திரங்கள் உள்ளடக்கிய விண்வெளிப் பிரதேசங்கள் கொண்ட அண்டங்கள் அனைத்தையும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. அதனால்தான் அவருடைய அதோமுகத்திற்கு அடியில் இருக்கும் கழுத்து அண்டவெளியைப் போல கண்டங் கருமையாய் உள்ளது என்கிற உண்மையை யாரும் அறிந்துகொள்ளாமல் சிவபெருமான் நஞ்சை உண்டதால்தான் (அமுதம் எடுக்கப் பாற்கடலை வாசுகி பாம்பினால் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம்) அவருடைய கழுத்து கருமையாய் இருக்கிறது என்று கூறுவார்கள் அவரை உணராதவர்கள். இதுபோலவே இறந்தவர்களின் ஆன்மாக்களைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் வெள்ளை நிறத்திலான மண்டையோடுகளை மாலையாக அணிந்து விரிந்த சடையைக் கொண்டிருக்கும் சிவபெருமானின் தன்மையை யாரும் அறியவில்லை.

அதோமுகம்: சிவபெருமானின் அதோமுகம் என்பது சூட்சும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை உடையது. தீயவர்களை அழிக்க முற்படும்போது தோன்றுவது அதோமுகம். அதோமுகத்தைக் கொண்ட சிவபெருமான் அழித்தலின் தலைவன் ஆவார். அவர் சூரபதுமன் என்ற அசுரனை அழிக்கத் தன் அதோமுகத்தை வெளிப்படுத்திய போது சக்தி தேவியே அதைக் கண்டு பயந்து மறைந்து கொண்டாள். இந்த அதோமுகத்தை உலக அழிவின் போதும் முருகப்பெருமானைப் படைத்த போதும் உக்கிரமாக வெளிப்படுத்திய சிவன்பெருமான் தன்னை வணங்கும் யோகிகளுக்கும் முனிவர்களுக்கும் அருள் கொடுக்கும் போது மட்டும் சாந்தமாக வெளிப்படுத்துவதே அதோமுக தரிசனம்.

பாடல் #520

பாடல் #520: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

விளக்கம்:

தேவர்களை விட அசுரர்கள் வலிமை பெற்றுத் தேவர்களை துன்புறுத்திட தேவர்கள் சிவபெருமானை நோக்கி எம்பெருமானே இறைவா நாங்கள் அசுரர்களால் துன்பப்படுகின்றோமே இது சரியா எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி வேண்டிட சிவபெருமான் தற்பரன் நிலையில் நின்று (நெற்றிக் கண் நெருப்பால் அனைத்தையும் அழித்துத் தானே அனைத்திற்கும் மேலானவன் நிரந்தரமானவன் ஆனந்தமானவன் எதனாலும் அழிக்க முடியாதவன் என்கின்ற நிலை) தன் இதயத்திலிருக்கும் ஒளியாகிய அழகிய பவளம் போன்ற திருமேனியுடைய ஆறுமுகனை யாம் அளிக்கும் படையுடன் சென்று தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்து வருவாயாக என்று கூறினார்.

பாடல் #519

பாடல் #519: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

விளக்கம்:

தான் ஒரு அந்தணன் என்று பெயரை மட்டும் கூறிக்கொண்டு சிவபெருமானிடம் அன்பும் சிவனைப் பற்றிய அறிவும் ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்தால் அக்கோயில் உள்ள நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் நடப்பதோடு அந்நாட்டில் கொடிய நோய்களும் விவசாய நிலங்களில் ஒன்றும் விளையாமல் பஞ்சமும் உண்டாகும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

குறிப்பு: திருமந்திரம் பாடல் எண் 224 முதல் 237 வரை அந்தணர் ஒழுக்கம் என்ற தலைப்பில் 14 பாடல்களில் அந்தணர் என்பவர் யார் அவர் எப்படி இருக்க வேண்டும் என்று திருமந்திர பாடல்களில் உள்ளது. இந்த 14 பாடல்களையும் நமது வலைதளத்தில் படித்து அறிந்து கொள்ளலாம். வலைப்பகுதியில் தேடுவதற்கு சிரமமாக இருந்தால் தேடல் பகுதியில் எண்களை டைப் செய்து என்டர் செய்தால் சிரமம் இல்லாமல் பாடல்களை பாடிக்கலாம்.

பாடல் #518

பாடல் #518: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் முதலாய் இருக்கும் இறைவன் கோவில்களில் தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தடைப்பட்டால் அந்த நாட்டை ஆளும் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். மழை இல்லாமல் நீர் குறைந்து நாட்டின் வளம் குன்றும். பொறி வைத்து திருடும் திருடர்கள் அதிகரித்து களவு பெருகும். இவ்வாறு உலகத்தில் நடக்கும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

பாடல் #517

பாடல் #517: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

விளக்கம்:

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடுகள் சிறப்பு நாள் வழிபாடுகள் (பிரதோஷம் சிவராத்திரி) ஆகியவற்றை முறையாகச் செய்யாமல் விட்டாலோ அல்லது ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி அக்கோவில்களில் ஏதேனும் தவறாக செய்தால் அந்த நாட்டில் தீர்க்க முடியாத நோய்கள் பரவும். மழை பெய்யாது. அந்த நாட்டை ஆளும் அரசன் பேரரசனாக இருந்தாலும் தனது எதிரிகளைப் போரில் வெல்லும் வலிமை குறைந்து போய்த் தன் நாட்டையே இழப்பான்.

பாடல் #516

பாடல் #516: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

விளக்கம்:

திருக்கோயில் சுற்றுச்சுவரைக் கட்டியவரே பின்பு பொருள் மீது ஆசை கொண்டு அந்தச் சுவற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்தாலும் தவம் புரியும் முனிவரோ வேதங்களைச் சொல்லும் அந்தணரோ என கல்லை எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களையும் அந்தக் குற்றம் நிகழாதவாறு பாதுகாப்பாக வைக்காததால் அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசனையும் ஆகமங்களை அருளிச்செய்த சிவபெருமானின் ஆணை அழித்துவிடும்.

பாடல் #515

பாடல் #515 : இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

விளக்கம்:

ஒரு திருக்கோயிலில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு போய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால் அச்செயல் அந்த வேறொரு திருக்கோயில் கட்டி முடிப்பதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும். அந்தச் செயலை செய்தவன் இறப்பதற்கு முன்பு தொழுநோய் வந்து துன்புற்று இறப்பான். இவ்வாறு எம் உயிர்க் காவலனாகிய நந்திபெருமான் உறுதிபட கூறினார்.

பாடல் #514

பாடல் #514: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பிற் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

விளக்கம்:

உயிர்கள் பிறக்கும் போது உள்ளத்தில் பலவகை குணங்கள் உள்ளது. அவை தாமசம், இராசதம், சாத்வீகம் என்ற 3 வகை குணங்களுக்கு உட்பட்டவை. தாமச குணங்கள் இருக்கும் போது குண்டலினி சக்தியாக இருக்கும் தீர்த்தமானது கறுப்பாக இருக்கும். இந்த தாமச குணம் இராசத குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது சிவப்பாக மாறும். இந்த இராசத குணம் சாத்வீக குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது வெளுப்பாகி மேலே சென்று சகஸ்ரதளத்தை அடையும். அவ்வாறு சகஸ்ரதளத்தை அடைந்ததும் தமது உடலாகவும் உடலுக்குள் உயிராகவும் இறைவனே இருப்பதை உயிர்கள் உணரலாம்.

குணங்களின் விளக்கம்:

தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களுக்கு ஆசைப்படுதல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.

இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.

சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.

குறிப்பு: இப்படாலில் 4வது வரியில் குறிப்பிட்டுள்ள நீர் அமிர்தத்தையும் நிலம் மண்ணாகிய உடம்பையும் காற்று மூச்சுக்காற்றாகிய உயிரையும் குறிக்கும்.

பாடல் #513

பாடல் #513: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுறத் தேடுவார் தம்மையொப் பாரே
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

விளக்கம்:

கடலினில் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு அதை கடலினில் தேடாமல் குளத்தில் தேடி அலைவதைப் போல உடலில் இறைவனே பல தீர்த்தங்களாக இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகின்றனர். உயிர்களின் உயிரை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும் குருநாதனாகிய இறைவன் தனது திருவருளால் உடலுக்குள்ளேயே புகுந்து இருப்பதை ஒருவரும் அறியாமல் இருக்கின்றனர்.

பாடல் #512

பாடல் #512: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

விளக்கம்:

உயிர்கள் அனைத்துக்குள்ளும் வீற்றிருக்கும் ஆதிமூல நாயகனாகிய இறைவனை தேவர்கள் தங்களுக்குள் இருக்கும் தீர்த்தத்தைத் தேடி அடைந்து அதன் மூலம் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டே அடைந்திருக்கிறார்கள். அது போலவே உயிர்கள் தங்களிடம் இருக்கும் 5 வித தீய குணங்களை நீக்கித் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டு தங்களுக்குள் மூலப்பொறியாக இருக்கும் குண்டலினி சக்தியை மேலெழுப்பிச் சென்று தங்களின் தலைக்குள் இருக்கும் கங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து விட்டால் புண்ணியர்களாக ஆகலாம்.

5 வித தீய குணங்கள்

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை