பாடல் #102

பாடல் #102: பாயிரம் – 8. குருமட வரலாறு

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

விளக்கம்:

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்) அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர் நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர் அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர் புலன்களை வென்ற பரமானந்தர் மற்றும் போக தேவர் (போகர்) இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச்செய்த திருமூலர் ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சுமநிலை பெற்றவர்கள்.

பாடல் #101

பாடல் #101: பாயிரம் – 8. குருமட வரலாறு

வந்த மடமேழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

விளக்கம்:

இறைவனை அடையும் உண்மையான வழிகளை உயிர்களுக்கு எடுத்துக்கூற இவ்வுலகத்திற்கு வந்த இறைவனை உணர்ந்து இறை நிலையை அடைந்த ஏழு நாதர்களில் முதலில் தோன்றியவனாகிய திருமூலன் எனும் யான் அந்த வழிகள் அனைத்தையும் ஒன்பது தந்திரங்களாகவும் அந்தத் தந்திரங்களைச் சார்ந்த மூவாயிரம் பாடல்களாகவும் இறைவன் வழங்கிய அழகிய ஆகமங்களின் பொருளை அழகான தமிழ்ச் சொற்களில் வழங்கியருளியதே இந்தத் திருமந்திர மாலை எனும் நூலாகும்.

பாடல் #100

பாடல் #100: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

விளக்கம்:

உயிர்கள் அனைத்தும் இறைவனை உணர்ந்து வீடு பேறு அடைய வேண்டும் என்கின்ற அன்பினால் யாம் உயிர்களுக்கு வைத்த பேரின்ப பரிசு திருமந்திரம் என்னும் பேரின்ப நன்மை தரும் நூலாகும். இந்த நூலிலுள்ள மூவாயிரம் பாடல்களில் யாம் வழங்கியிருப்பது இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளும் அதன் முடிவில் இறைவனோடு என்றும் கலந்து இருக்கும் பேரின்பத்தின் விளக்கங்களும் ஆகும். இறைவனின் அருளால் அறிவுப்பூர்வமாக இயற்றப்பெற்ற இந்த மூவாயிரம் பாடல்களும் அனைவருக்கும் பொதுவானவையாகும். இந்த மூவாயிரம் பாடல்களையும் தமது சிந்தையில் வைத்து, அவற்றின் பொருளுணர்ந்து போற்றி வருபவர்களுக்கு அனைத்துவிதமான சிறப்புகளையும் கொடுக்கும் இந்த திருமந்திரப் பாடல்கள்.

பாடல் #99

பாடல் #99: பாயிரம் – 7. திருமந்திரத் தொகை சிறப்பு

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

விளக்கம்:

திருமூலனாகிய யான் வழங்கிய இந்த மூவாயிரம் தமிழ் மந்திரங்களும் யான் பெற்ற இன்பம் இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பினாலேயே எம் குருநாதன் இறைவனின் அருளால் வழங்கப் பெற்றது. இந்த மந்திரங்களைக் காலையில் எழுந்து அவற்றின் பொருளை ஓதி உணர்ந்து அதில் உள்ள கருத்துக்களை கடைபிடித்து வந்தால் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய சதாசிவமூர்த்தியைச் சென்று அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெறலாம்.

பாடல் #98

பாடல் #98: பாயிரம் – 6. அவையடக்கம்

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினாலும் இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல் இறைவனையும் தம்மையும் வேறு வேறாகக் எண்ணிக்கொண்டு அவ்விறைவனின் மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள் இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

பாடல் #97

பாடல் #97: பாயிரம் – 6. அவையடக்கம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் உணர முடியாதவனும் இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவனும் படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் தியானிக்கும் சதாசிவமூர்த்தியை அவனது அருள்கொண்டே அவனை உணர முடியும்.

பாடல் #96

பாடல் #96: பாயிரம் – 6. அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

விளக்கம்:

இறைவனைத் துதித்து பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச் சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். அப்படிப்பட்ட எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் பேரருளே.

பாடல் #95

பாடல் #95: பாயிரம் – 6. அவையடக்கம்

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.

விளக்கம்:

எவராலும் அறிய முடியாத அளவிற்கு பெருமைகளை உடையவனும் எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவனும் எவராலும் அறிந்து கொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்கு பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும் தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனுமான எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

பாடல் #94

பாடல் #94: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

விளக்கம்:

நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனை எனது நெஞ்சத்துள் வைத்து இரவு பகல் பாராமல் எப்போதும் அவனின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன். எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.

பாடல் #93

பாடல் #93: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

விளக்கம்:

இறைவன் வழங்கிய ஆகமங்கள் எவ்வளவு என்று எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்க அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருக்கும் இறைவனே உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக வீசிக்கொண்டு இருக்கின்றான்.