பாடல் #2

பாடல் #2: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

விளக்கம் :

இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இசைத்துப் பாடும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புனிதமானவனும் நான்கு திசைகளுக்கும் (உலகமனைத்திற்கும்) நன்மை புரியும் மாதுவாகிய சக்திக்குத் தலைவனானவனும். மேற்கூறிய நான்கு திசைகளுக்குள் தென் திசைக்கு தலைவனானவனும் காலத்தின் அதிபதியான எமனை எட்டி உதைத்ததால் காலத்தை வென்றவனும் ஆகிய இறைவனை யான் கூறிகின்றேன்.

பாடல் #1

பாடல் #1: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

விளக்கம்:

இறைவன் ஒருவனே அவனைத்தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்டசராசரங்களும், அதிலுள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான்.

ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள் அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது எப்படி கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.

இரண்டாக இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.

மூன்றாய் நின்ற இறைவனே உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.

நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களகவும் இருக்கின்றான். அதாவது தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன் அவன் ஒருவனே.

ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.

ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி ஏழாவது சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும் தாண்டி பரவெளியில் உறைந்திருக்கின்றான்.

ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.

பாடல்: பாயிரம் – கடவுள் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
யிந்து விளம்பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஐநது கரததனை யானை முகததனை
யிநது விளமபிறை பொலு மெயிறறனை
நநதி மகனறனை ஞானக கொழுநதினைப
புநதி யிலவைத தடிபொறறுகின றெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஐந்து கரத்து அனை யா அனை முகத்து அனை
இந்து விளம் பிறை போலும் எயிற்று அனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தி இல் வைத்து அடி போற்றுகின்றேனே.

பதப்பொருள்:

ஐந்து (ஐந்து) கரத்து (கரங்களே) அனை (ஐந்து பூதங்களாக உடையவனும்) யா (உலகம்) அனை (போன்ற) முகத்து (திருமுகமே) அனை (உலகமாக உடையவனும்)

இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)

நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)

புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).

விளக்கம்:

ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.

இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.