பாடல் #1572

பாடல் #1572: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

அறிய வொண்ணாத வுடம்பின் பயனை
யறிய வொண்ணாத வறுவகை யாக்கி
யறிய வொண்ணாத வறுவகைக் கோசத்
தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிய வொணணாத வுடமபின பயனை
யறிய வொணணாத வறுவகை யாககி
யறிய வொணணாத வறுவகைக கொசத
தறிய வொணணாத தொரணடம பதிததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிய ஒண்ணாத உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதித்தே.

பதப்பொருள்:

அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) உடம்பின் (உடம்பின்) பயனை (உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற) ஆக்கி (ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தாங்கள் கடைபிடிக்கின்ற வழி முறையின் மூலம் கிடைக்கின்ற) கோசத்து (தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாதது (முடியாததாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அண்டம் (அண்டத்தையே தமது உடம்பிற்குள்) பதித்தே (பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்).

விளக்கம்:

அறிந்து கொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று, ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.