பாடல் #1563

பாடல் #1563: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

தேர்ந்தவர் தன்னை யடைந்த சிவநெறி
பேர்ந்தவ ருன்னிப் பெயர்ந்த பெருவழி
யார்ந்தவ ரண்டத்து புக்க வருநெறி
போந்து பிணைந்து புணர்நெறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரநதவர தனனை யடைநத சிவநெறி
பெரநதவ ருனனிப பெயரநத பெருவழி
யாரநதவ ரணடதது புகக வருநெறி
பொநது பிணைநது புணரநெறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேர்ந்தவர் தன்னை அடைந்த சிவ நெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெரு வழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள் நெறி
போந்து பிணைந்து புணர் நெறி ஆமே.

பதப்பொருள்:

தேர்ந்தவர் (இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு) தன்னை (பெற்றவர்கள்) அடைந்த (அடைந்த) சிவ (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை)
பேர்ந்தவர் (அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு) உன்னி (மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு) பெயர்ந்த (ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு அடைகின்ற) பெரு (மிகப் பெரும்) வழி (வழி முறைகளை)
ஆர்ந்தவர் (நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும்) புக்க (புகுந்து இருக்கின்ற) அருள் (இறையருளை) நெறி (அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து)
போந்து (அதற்குள் புகுந்து) பிணைந்து (அதனோடு பின்னிப் பிணைந்து) புணர் (ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறை) ஆமே (இதுவே ஆகும்).

விளக்கம்:

இறைவனை தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள் அடைந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை அவர்கள் அடைந்த படியே வெளிப்புறமாக தேடுவதை விட்டு விட்டு, மனதை ஒருநிலைப் படுத்தி தமக்குள் இறைவனையே நினைத்துக் கொண்டு, ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு விட்டு, அடைகின்ற மிகப் பெரும் வழி முறைகளை நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டவர்கள், அண்ட சராசரங்களில் உள்ள அனைத்திலும் புகுந்து இருக்கின்ற இறையருளை அடைவதற்கான வழி முறைகள் தமக்குள்ளே இருப்பதை உணர்ந்து, அதற்குள் புகுந்து அதனோடு பின்னிப் பிணைந்து ஒன்றாக கலந்து இறைவனை அடைகின்ற வழி முறை இதுவே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.