பாடல் #1568

பாடல் #1568: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இததவ மததவ மெனறிரு பெரிடும
பிததரைக காணில னாமெஙகள பெரநநதி
யெததவ மாகிலெ னெஙகும பிறககிலெ
னொததுணர வாரககுஒலலை யூரபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி
எத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே.

பதப்பொருள்:

இத் (இந்த) தவம் (தவம் சிறந்தது) அத் (அந்த) தவம் (தவம் சிறப்பு இல்லாதது) என்று (என்று) இரு (நன்மை தீமை என்று இரண்டு விதமான) பேர் (பெயர்களை) இடும் (வைக்கின்ற)
பித்தரை (பைத்தியக் காரர்களை) காண் (காண்பது) இலன் (இல்லாதவன்) ஆம் (ஆக இருக்கின்றான்) எங்கள் (எங்களின்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
எத் (எந்த) தவம் (தவத்தை) ஆகில் (கடைபிடித்தால்) என் (என்ன?) எங்கும் (இந்த உலகத்தில் எந்த இடத்தில்) பிறக்கில் (எந்த உயிராக பிறந்திருந்தால்) என் (என்ன?)
ஒத்து (அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை) உணர்வார்க்கு (உணருபவர்களுக்கு) ஒல்லை (உடனடியாக) ஊர் (முக்திக்குள்) புகல் (நுழைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.