பாடல் #1566

பாடல் #1566: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பல
வாய்ந்துணரா வகை நின்ற வரனெறி
யாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழு
தேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதுணர வாரகளான சாததிரம பல
வாயநதுணரா வகை நினற வரனெறி
யாயநதுணர வாரரன செவடி கைதொழு
தெயநதுணரச செயவ தொரினபமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து உணர்வார்கள் ஆன சாத்திரம் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
ஆய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழுது
ஏய்ந்து உணர செய்வது ஓர் இன்பமும் ஆமே.

பதப்பொருள்:

ஆய்ந்து (ஆராய்ந்து) உணர்வார்கள் (உணர்ந்தவர்கள்) ஆன (அதற்கான) சாத்திரம் (விதி முறைகளை) பல (பல விதமாக கூறுகின்றார்கள்)
ஆய்ந்து (ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து) உணரா (உணர முடியாத) வகை (வகையில் தான்) நின்ற (நிற்கின்றது) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (உண்மையான வழி முறை)
ஆய்ந்து (அதனை தமக்குள் ஆராய்ந்து) உணர்வார் (உணர்ந்து கொண்டவர்கள்) அரன் (இறைவனின்) சேவடி (திருவடிகளை) கை (இரண்டு கைகளும் கூப்பி) தொழுது (தொழுது வணங்கி)
ஏய்ந்து (தம்முடைய தூய்மையான அன்பினால்) உணர (இறைவனை உணர்ந்து) செய்வது (கொள்ளுவதே) ஓர் (ஒரு) இன்பமும் (பேரின்பம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைய தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழி முறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதற்கான விதி முறைகளை பல விதமாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து உணர முடியாத வகையில் தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழி முறை. அதனை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் இறைவனின் திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பி தொழுது வணங்கி தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்து கொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.

கருத்து:

இறைவனை அடைவதற்கு சமையங்கள் சொல்லுகின்ற பல விதமான விதி முறைகளை ஆராய்வதால் ஒரு பயனும் இல்லை. அன்பினால் தமக்குள் ஆராய்ந்து உணருவதே இறைவனை அடைவதற்கான உண்மையான வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.