பாடல் #1567

பாடல் #1567: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சமையத தனிநாயக னநதி
யுயய வகுதத தொருநெறி யொனறுணடு
தெயவ வரனெறி சனமாரகஞ செரநதது
வையத துளளவரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சமைய தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

விளக்கம்:

சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.