பாடல் #1643

பாடல் #1643: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் புக்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
ளிழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பழுககினற வாறும பழமுணணு மாறுங
குழககனறு துளளியக கொணியைப புககாற
குழககனறு கொடடிலிற கடடவல லாரககுள
ளிழுககாது நெஞசத திடவொனறு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பழுக்கின்ற ஆறும் பழம் உண்ணும் ஆறும்
குழ கன்று துள்ளி அக் கோணியை புக்கு ஆல்
குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழுக்காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே.

பதப்பொருள்:

பழுக்கின்ற (தவத்தில் மேன்மை நிலையை அடைகின்ற) ஆறும் (வழி முறையும்) பழம் (அந்த தவத்தின் பலன்களை) உண்ணும் (அனுபவிக்கின்ற) ஆறும் (வழி முறையும்)
குழ (இளங்) கன்று (கன்று போல) துள்ளி (ஆசைகளின் வழியே துள்ளி குதிக்கின்ற மனதை) அக் (தமது) கோணியை (உடலாகிய கோணிப் பைக்குள்) புக்கு (உள்ளே புகுந்து) ஆல் (இருக்கும் படி வைத்து)
குழ (இளங்) கன்று (கன்று போல இருக்கின்ற மனதை) கொட்டிலில் (ஆசைகள் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைக்கும் படி) கட்ட (கட்டி வைக்க) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு) உள் (தமக்கு உள்ளே அடங்கி இருக்கின்ற மனது)
இழுக்காது (மறுபடியும் ஆசைகள் பற்றுக்களின் வழியே இழுத்துக் கொண்டு போகாமல்) நெஞ்சத்து (தமது நெஞ்சத்திற்குள் இறைவன் இருக்கின்ற) இட (இடத்திலேயே) ஒன்றும் (அவனோடு சேர்ந்து) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

தவத்தில் மேன்மை நிலையை அடைகின்ற வழி முறையும் அந்த தவத்தின் பலன்களை அனுபவிக்கின்ற வழி முறையும் இளங் கன்று போல ஆசைகளின் வழியே துள்ளி குதிக்கின்ற மனதை உடலாகிய கோணிப் பைக்குள் உள்ளே புகுந்து இருக்கும் படி வைத்து ஆசைகள் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைக்கும் படி கட்டி வைக்க முடிந்தவர்களுக்கு, தமக்கு உள்ளே அடங்கி இருக்கின்ற மனது மறுபடியும் ஆசைகள் பற்றுக்களின் வழியே இழுத்துக் கொண்டு போகாமல், தமது நெஞ்சத்திற்குள் இறைவன் இருக்கின்ற இடத்திலேயே அவனோடு சேர்ந்து இருக்கும்.

யோக விளக்கம்:

யோக வழி முறையில் யோகியானவர் தமது குண்டலினி சக்தியை துள்ளிக் குதிக்கின்ற மூச்சுக் காற்றாகிய கன்றின் மூலம் எழுப்பி ஆறு ஆதார சக்கரங்களாகிய பழங்களை பழுக்கும் படி செய்து குண்டலினி சக்தியை ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளம் எனும் கோணிப் பைக்குள் எடுத்துச் சென்று கட்டி வைத்து அதன் பலனால் ஊறுகின்ற அமிழ்தத்தை உண்டு அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து விடும் படி செய்து இறைவனை அடையலாம்.

பாடல் #1644

பாடல் #1644: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவாற்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோ ரறவுண்டாற்
சித்தஞ் சிவமாகவே சித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததஞ சிவமாகச செயதவம வெணடாவாற
சிததஞ சிவானநதஞ செரநதொ ரறவுணடாற
சிததஞ சிவமாகவெ சிததி முததியாஞ
சிததஞ சிவமாதல செயதவப பெறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டா ஆல்
சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் அற உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே.

பதப்பொருள்:

சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆக (ஆகுவதற்கு) செய் (உடலால் செய்கின்ற) தவம் (தவ வழி முறைகள் எதுவும்) வேண்டா (வேண்டாம்) ஆல் (ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும்)
சித்தம் (இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு) சிவ (சிவமாகி) ஆனந்தம் (பேரின்பத்தை) சேர்ந்தோர் (அடைந்தவர்கள்) அற (அனைத்தையும் விட்டு விலகி) உண்டு (இருப்பதனாலேயே அடைந்தார்கள்) ஆல் (அதன் விளைவாக)
சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆகவே (ஆகி விடும் போது) சித்தி (அதனால் கிடைக்கின்ற இறை அருளே) முத்தி (முக்தியாகவும்) ஆம் (இருக்கின்றது)
சித்தம் (இவ்வாறு அறிவு) சிவம் (சிவமாகவே) ஆதல் (ஆகுவது) செய் (இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டே இருக்கின்ற) தவ (தவத்தின்) பேறே (பலனால் ஆகும்).

விளக்கம்:

அறிவு சிவமாகவே ஆகுவதற்கு உடலால் செய்கின்ற தவ வழி முறைகள் எதுவும் வேண்டாம் ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும். இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகி பேரின்பத்தை அடைந்தவர்கள் அனைத்தையும் விட்டு விலகி இருப்பதனாலேயே அடைந்தார்கள். அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகி விடும் போது அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.