பாடல் #1644

பாடல் #1644: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவாற்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோ ரறவுண்டாற்
சித்தஞ் சிவமாகவே சித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததஞ சிவமாகச செயதவம வெணடாவாற
சிததஞ சிவானநதஞ செரநதொ ரறவுணடாற
சிததஞ சிவமாகவெ சிததி முததியாஞ
சிததஞ சிவமாதல செயதவப பெறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டா ஆல்
சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் அற உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே.

பதப்பொருள்:

சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆக (ஆகுவதற்கு) செய் (உடலால் செய்கின்ற) தவம் (தவ வழி முறைகள் எதுவும்) வேண்டா (வேண்டாம்) ஆல் (ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும்)
சித்தம் (இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு) சிவ (சிவமாகி) ஆனந்தம் (பேரின்பத்தை) சேர்ந்தோர் (அடைந்தவர்கள்) அற (அனைத்தையும் விட்டு விலகி) உண்டு (இருப்பதனாலேயே அடைந்தார்கள்) ஆல் (அதன் விளைவாக)
சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆகவே (ஆகி விடும் போது) சித்தி (அதனால் கிடைக்கின்ற இறை அருளே) முத்தி (முக்தியாகவும்) ஆம் (இருக்கின்றது)
சித்தம் (இவ்வாறு அறிவு) சிவம் (சிவமாகவே) ஆதல் (ஆகுவது) செய் (இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டே இருக்கின்ற) தவ (தவத்தின்) பேறே (பலனால் ஆகும்).

விளக்கம்:

அறிவு சிவமாகவே ஆகுவதற்கு உடலால் செய்கின்ற தவ வழி முறைகள் எதுவும் வேண்டாம் ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும். இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகி பேரின்பத்தை அடைந்தவர்கள் அனைத்தையும் விட்டு விலகி இருப்பதனாலேயே அடைந்தார்கள். அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகி விடும் போது அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.