பாடல் #1638

பாடல் #1638: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

மனத்திடை நின்ற மதிவா ளுருவி
யினத்திடை நீக்கி யிரண்டற வீர்ந்து
புனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்
றவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததிடை நினற மதிவா ளுருவி
யினததிடை நீககி யிரணடற வீரநது
புனததிடை நஞசையும பொக மறிததாற
றவததிடை யாறொளி தனனொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்து இடை நின்ற மதி வாள் உருவி
இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்ந்து
புனத்து இடை நஞ்சையும் போக மறித்தால்
தவத்து இடை ஆறு ஒளி தன் ஒளி ஆமே.

பதப்பொருள்:

மனத்து (மனதிற்கு) இடை (நடுவில்) நின்ற (நிற்கின்ற) மதி (அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய) வாள் (வாளினை) உருவி (தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து)
இனத்து (தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய) இடை (தளைகளையெல்லாம்) நீக்கி (அறுத்து நீக்கி) இரண்டு (தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை) அற (அறுத்து) ஈர்ந்து (இறைவனோடு ஒன்றாக சேர்ந்து)
புனத்து (எவ்வளவு நீர் இருந்தாலும்) இடை (அதற்கு நடுவில்) நஞ்சையும் (ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல்) போக (போகும் படி) மறித்தால் (தடுத்து நிறுத்தினால்)
தவத்து (தாம் செய்து வருகின்ற தவத்தின்) இடை (மேன்மை பெற்ற நிலையில்) ஆறு (தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய) ஒளி (ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே) தன் (தமது) ஒளி (ஒளியும்) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

மனதிற்கு நடுவில் நிற்கின்ற அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய வாளினை தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய தளைகளையெல்லாம் அறுத்து நீக்கி, தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை அறுத்து, இறைவனோடு ஒன்றாக சேர்ந்து, எவ்வளவு நீர் இருந்தாலும் அதற்கு நடுவில் ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல் போகும் படி தடுத்து நிறுத்தினால், தாம் செய்து வருகின்ற தவத்தின் மேன்மை பெற்ற நிலையில் தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே தமது ஒளியும் ஆகி விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.